வெடிப்பு சம்பவம் – நீரை பருகும் போதும் எச்சரிக்கை!

Monday, June 6th, 2016

அவிசாவளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசம் யுத்தம் களம் போன்று காட்சியளிக்கின்றது. மேலும் அவிசாவளை பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொஸ்கமவில் ஏற்பட்ட  தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுமாயின் 117 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விபத்தால் அப்பகுதியில் இருந்த பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேதமாகியுள்ளன.

மேலும் குறித்த விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் படும் காயமடைந்துள்ளதுடன் 39 பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேற்படி வெடிப்புச் சம்பவத்தால் இராணுவ முகாமிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவு வரையில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுத களஞ்சியமானது இராணுவத்தின் பிரதான களஞ்சியங்களில் ஒன்றாகும். இங்கு ரீ – 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் முதல் ஆர்.பி.ஜி. மல்டி பெரல் தோட்டாக்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை 5.42 மணிக்கு ரீ 56 ரக தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் முதலில் இரு வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மறு பகுதியில் மேலும் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந் நிலையிலேயே தீ பரவ ஆரம்பித்து பாரிய அதிர்வுகளுடன் தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் இலத்திரனியல் மற்றும் இயந்திர படைப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இந்த இராணுவ முகாம் உள்ளது.

இந்தநிலையில் குறித்த தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் சலாவ இராணுவ முகாமிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெடிப்புக்கு உள்ளான பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளில் காணப்படுவதாகவும், அவற்றைக் கண்டால் கைகளால் தொட முயற்சிக்க வேண்டாம் என்று  மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன்,குறித்த பொருட்களை கண்டால் 0113818609 அல்லது 0112434251 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து அவிஸாவலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இன்றையதினம் மூடப்படுள்ளதுடன், வெடிப்பு நிகழ்ந்துள்ள பகுதி வீதிகள் மூடப்பட்டுள்ளமையால் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் நிலவுவதால் குறித்த பகுதியில் சுவாசிப்பதால் சுவாசக்கோளாறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் ஈரத்துனியால் முகத்தை மறைத்து சுவாசிப்பதே சிறந்தது அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: