இந்தியாவில் துணை ஆட்சியராக நியமனம் பெற்ற இலங்கைத்தமிழர்!

Tuesday, July 5th, 2016

இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக (Assistant Collector) நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், பண்டலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர். தந்தையார் காளிமுத்து, தாயார் பூவதி. இவரின் முன்னோர், கடந்த 1823ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர்.

ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை அரசு இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்களின் குடியுரிமையைப் பறித்து திருப்பி அனுப்ப தொடங்கியது.

அங்கிருந்து லட்சக்கணக்கானோர் தாயகம் திரும்பினர். இன்பசேகரின் குடும்பமும் மீண்டும் தாயகம் திரும்பியது.

பிழைப்புக்காக கொடைக்கானல், ஏற்காடு என பல மலைக் கிராமங்களில் வேலை வாய்ப்பினைத் தேடி அலைந்தனர். இறுதியாக நீலகிரி மாவட்டம் படகராவுக்கு வந்து குடியேறினர் இன்பசேகரனின் பெற்றோர். கூடலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து, வாழ்க்கையை ஓட்டினர்.

தொடக்கக் கல்வி படிப்பை பந்தலூரில் உள்ள அரசு பள்ளியில் இன்பசேகர் படித்தார். தினமும் பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து தான் பள்ளிக்குச் செல்வார். அடர்ந்த வனப்பகுதியில், தினமும் 2 மணி நேர நடைக்கு பிறகு தான் பள்ளிக்கே செல்ல முடியும். யானை, சிறுத்தைப் புலி எல்லாம் சர்வ சாதாரணமாகக் கடந்து செல்லும் பகுதி அது.

கடுமையான வறுமைக்கிடையேயும் பள்ளிப் படிப்பை முடித்த இன்பசேகர் கோவை, ஹைதராபாத் வேளாண் பல்கலையில் பட்டம் பெற்ற பிறகு, வேளாண் விஞ்ஞானியாக பணி புரியத் தொடங்கினார்.

எனினும் ஐஏஎஸ் ஆவதுதான் அவரது ஒரே இலக்கு. அதற்காகக் கடுமையாக உழைத்த இன்பசேகரன், தற்போது ஐஏஎஸ் பரீட்சையில் சித்தியெய்தி, கோழிக்கோடு மாவட்டத் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில், முதலாவது ஐஏஎஸ் இன்பசேகர் தான். ஐஏஎஸ். தேர்வானது குறித்து இன்பசேகர் கூறுகையில்,

மலையகத் தமிழர்களாக கடந்த பல ஆண்டுகளாக எங்கள் சமூகமே பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்திருக்கிறது. ஏற்காடு, உதகை, கொடைக்கானல் என பல இடங்களில் நாங்கள் சிதறிக் கிடக்கிறோம்.

தற்போது நான் இந்த பதவிக்கு வந்திருப்பது தமிழகத்தை எங்கள் மக்கள் மீது பார்வையை திருப்ப வைக்கும்.தாயகம் திரும்பிய பலரும் என்னைப் போல படித்து உயர வேண்டுமென்பதே எனது ஒரே ஆசை என்றார்.

Related posts: