வாள்வெட்டு வன்முறையை நிறுத்துவத வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள் – பிரதி பொலிஸ்மா அதிபரிருக்கு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் அறிவுறுத்து!

Thursday, December 7th, 2023

வாள்வெட்டு வன்முறையை நிறுத்துவதற்கு வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து  சட்ட நடவடிக்கை எடுங்கள் என பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தான் அறிவுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாடு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க எங்கள் செயற்பாடுகளை ஒன்றிணைப்போம்’ என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

எமது சூழலுக்கேற்ப எமது வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எமது வாழ்க்கை முறைக்கேற்ப அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் அதனை பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையை எத்தனை பேர் பார்க்கிறார்கள். இந்திய தொலைக்காட்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள். சிறுவர்களிலும் பார்க்க சிறுமிகளை அவதானித்தால், அவர்களின் பேச்சுகளில் நிறையவே மாற்றங்களை காணலாம். அந்தளவுக்கு சினிமா பார்க்கிறார்கள்.

நாங்கள் வழிதவறாமல் செல்வதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் எமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். எமது வாழ்க்கை முறையை சரியாக கொண்டு சென்றாலே  எதிர்கால சந்ததிகள் முறையான, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள்.

இன்றைய காலத்தில் வாள்வெட்டு கலாசாரம், போதைவஸ்து பயன்பாடு அதிகரித்து ஆக்கிரமித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த ஒன்றிணைய வேண்டும்.

‘வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உறபத்தியாளர்களை கைது செய்யுங்கள்’ என அண்மையில் இடம்பெற்ற பொலிஸாருடனான சந்திப்பில் அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: