யாழ்.நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை வான் வந்ததால் பதற்றம்!

Tuesday, September 13th, 2016

யாழ் நீதிமன்றில் நீதிவான், வழக்கினை நிறைவு செய்து வெளியில் வரும் போது, கொழும்பு குற்றப்பிரிவினர் மூவரை வெள்ளை வானில் ஏற்றி சென்றுள்ளதனால் நீதிமன்ற வளாகத்தில் இன்றையதினம் (13) பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

கேதீஸ்வரன், அஜந்தன், அகிலன் ஆகிய மூவரையுமே எழுமாற்றாக பிடித்து சென்றுள்ளதாகவும், இதன்போது ஏன் பிடிக்கின்றீர்கள் என மற்றவர்கள் வினவியுள்ளதுடன் விசாரணைக்காக பிடிப்பதாக வெள்ளை வானில், வந்த கொழும்பு குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த ஏனையவர்கள் அந்த இடத்தில் இருந்து பாய்ந்து ஓடியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், மூவரையும் நீதிபதியின் உத்தரவின்றி கொழும்பு குற்றப்பிரிவினர் பிடித்து சென்றுள்ளதாகவும், வழக்கிற்கு வந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதால், பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் நடைபெற்ற கலவரத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்.நீதிமன்றில் நடைபெற்றதுடன், யாழ்.நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக 74 பேர் இன்று ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வழக்கிற்கு சமூகமளிக்காத நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  குறித்த உத்தரவினை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்தரன் பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு நிறைவடைந்த பின்னர் 74 பேரும் நீதிமன்றத்திற்கு வெளியில் வரும் போதே கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தின் முன்பாக வைத்து வெள்ளைவானில் மூவரை பிடித்து சென்றுள்ளனர்.

jaffna-court1

Related posts: