சட்டவிரோத மீன்பிடிக்காக எல்லைதாண்டிய இந்திய இழுவை படகு குருநகர் மீனவர் படகு மீதி மோதியதில் அடாவடி – படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் என குற்றச்சாட்டு!

Tuesday, October 5th, 2021

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை மோதி  சேதப்படுத்தியதோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று  12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை  கற்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர்  இலங்கை மீன்பிடி  படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை செயதுள்ளார்கள்

இந்நிலையில் எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது குறிப்பாக அத்துமீறிய  இந்திய மீனவர்கள் எமது படகினை  சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த போதிலும் இலங்கை மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம்  கண்டனம்  வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகுருநகர் கடற்தொழில் அபிவிருத்தி  சங்கத்தின் தலைவர்யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகுகளால்  குருநகர் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவை  படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில்  அமைச்சு மட்டத்தில்  முறையிட்டுள்ளோம் இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும் இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது

இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இன்றைய சம்பவமானது நேரடியாக  பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் இந்திய அரசினால்   நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

ஏனென்றால் இந்திய  மீனவர்கள் எல்லை தாண்டி  வருவது ஒருபுறம் அதேபோல மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது இன்னொருபுறமாக இருக்கின்றது இந்த நிலையில் எமது மீனவர்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவே இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

அத்தோடு நடுக்கடலில் மீனவர்களை தாக்குவதோடு அவர்களின் உயிர்களை காப்பாற்றாது கடலில்  தத்தளிக்கிற நிலை காணப்படுகின்றது

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் இயற்கை அனர்த்தம்  உள்ள நிலைமையில்   தாக்கி சேதமாக்கப்பட்ட படகினை ஓட முடியாத நிலை காணப்பட்டிருந்தால் அந்த 3 மீனவர்களும்  உயிரிழக்க கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும்

எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை கடற்தொழில்  அமைச்சும்  அரசாங்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கபது.

000

Related posts: