யாழ்ப்பாணம் நீதிவான் மன்ற அமர்வுகள் இரு இடங்களில் திங்கள் முதல் இடம்பெறுகின்றன!

Wednesday, January 4th, 2017

யாழ்ப்பாணம் நீதிவான் மன்ற அமர்வுகள் இரு இடங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் முன்வைக்கப்படும் குற்றவியல் வழக்குகள் யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதியிலும் சட்ட விதிமுறை மீறல்கள் மற்றும் தாபரிப்பு வழக்குகள் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சிறுவர் நீதிவான் மன்றக் கட்டடத்தொகுதியிலும் இடம் பெறுகின்றன.

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறும் யாழ்.நீதிவான் மன்ற அமர்வில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் வழக்குகள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாண சிறுவர் நீதிமன்றில் இடம்பெறும் அவர்வில் மேலதிக நீதிவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாணம் நீதிவான் மன்றுக்கு மேலதிக நீதிவானாக யாழ்ப்பாண சிறுவர் நீதிமன்ற நீதிவான் ஜீவராணி கருப்பையா நீதிச்சேவை ஆணைக்குழுவால் கடந்த 1ம் திகதி முதல் இடமாற்றம் பெற்றார். இதனையடுத்தே இந்த ஏற்பாடுகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 அமர்வுகளையும் நடத்த யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இட வசதியின்மை காரணமாகவே இவ்வாறு இரண்டு இடங்களில் அமர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்து.

இதில் மது வரித் திணைக்களம், பொதுக் சுகாதார பரிசோதகர், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, உள்ளுராட்சி சபைகள் உள்ளிட்ட அரசதுறை திணைக்களங்களினால் முன்வைக்கப்படும் வழக்குகள் மற்றும் தாபரிப்பு வழக்குகளே யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சிறுவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் மேலதிக நீதிவான் முன்னிலையில் இடம்பெறுகின்றன.

பொலிஸாரின் முன்வைக்கப்படும் வழக்குகள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்கும் நீதிவான் மன்ற அமர்வில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

court hammer_34

Related posts: