மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விரைவில் விடுவிக்க இணக்கம் தெரிவித்த பலாலி இராணுவத் தளபதி?

மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பாலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை(20) பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
முற்பகல்-11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்ட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பில் மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கு. குணராஜன், மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் ந. இரட்ணராஜா மற்றும் மல்லாகம் கோணாப் புலம் நலன்புரி முகாம், மல்லாகம் நீதவான் முகாம் ஆகிய முகாம்களின் தலைவர்கள் உள்ளிட்ட முகாம்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
யாழ்.பருத்தித்துறை வியாபாரி மூலையில் தற்காலிகமாக இயங்கி வரும் மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த-17 ஆம் திகதி இடம்பெற்ற மீனவர்களுக்கான விசேட கூட்டத்தில் மயிலிட்டிப் பிரதேசத்தை உடனடியாக விடுவிக்காவிடில் பாரிய மக்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் எதிரொலியாகவே பலாலி இராணுவத் தளபதி மயிலிட்டி மீனவ பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரிய வருகிறது.
Related posts:
|
|