பொது நிதியை சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் – அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு!

Saturday, September 10th, 2022

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் செலவிடும் பொது நிதியை சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் நேற்று (09) பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 08 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது அந்த விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் . இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படமாட்டாது. இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர் நியமிக்கப்படமாட்டார்கள். துறைசார் இராஜாங்க அமைச்சர்கள், பணிகளை இலகுபடுத்த, தனது அமைச்சுக்களில் உள்ள மேலதிக செயலாளர்களில் சிரேஸ்ட அதிகாரியின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதேநேரம் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமது அமைச்சில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள பணியாளர்களைப் பயன்படுத்தியே தமது பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். பதவிகளில் புதியவர்களை அமர்த்துவதற்கான கோரிக்கைகளை நிர்வாக சேவைகள் திணைக்களத்திடம் முன்வைக்கக் கூடாது.

மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது பணி செய்துவரும் அலுவலக வளாகத்துக்குள்ளேயே இராஜாங்க அமைச்சர்களின் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர்களுடைய பணியாளர் குழாமில் பிரத்தியேகச் செயலாளருக்கு மட்டுமே உத்தியோகபூர்வ வாகன வசதி வழங்கப்படும். பிரத்தியேகச் செயலாளரின் உத்தியோகபூர்வ சாரதியின் மேலதிக நேரம் மற்றும் இதர கொடுப்பனவுகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையின்படி கையாளப்பட வேண்டும்.

இதேவேளை பணியாளர் குழாமின் ஏனைய உறுப்பினர்களுக்காக 2 வாகனங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக அமைச்சுக்கு சொந்தமான ஏனைய வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது.

இதேநேரம் நிர்வாக உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலக உதவியாளர், சாரதி ஆகியோர், நிரந்தர அரச ஊழியர்களாகவே இருத்தல் வேண்டும். அந்த சாரதிகள் மாதாந்தம் மேலதிக நேர கொடுப்பனவாக அதிகபட்சம் 150 மணிநேரத்திற்கான கொடுப்பனவை மட்டுமே பெறமுடியும்.

மேலும் பிரத்தியேக செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோருக்கு குறைந்தபட்ச தொலைத் தொடர்பு கொடுப்பனவு வழங்க முடியும். இதில் டேட்டா பயன்பாடு, சர்வதேச தொலைபேசிக் கட்டணம், மாதாந்த நிலையான கட்டணம், வரிகள் உட்பட ஏனைய கட்டணங்களும் இவற்றில் உள்ளடங்கும்.

அத்துடன் உதவி ஊழியர்களுக்கு அரச செலவில் தொலைபேசிக் கட்டணங்கள் வழங்கப்பட மாட்டாது. ஆகிய விதிமுறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, CA/01/17/01 மற்றும் அரச செலவு நிர்வாகம் என்ற தலைப்பில் மே 14, 2010 அன்று வெளியிடப்பட்ட கடிதங்கள் மற்றும் அவ்வப்போது திருத்தங்களுடன் வெளிவந்த கடிதங்களில் உள்ள விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: