மடுஅன்னையின் ஆவணித் திருவிழா!  

Tuesday, August 16th, 2016

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் ஆண்டகை போன்றோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர்.

இம்முறை திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. திருநாள் திருப்பலி நிறைவில் மடுமாதா திச்செரூப பவனியும் இறுதி ஆசீர்வாதமும் இடம் பெற்றது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி. தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்றதுடன் நேற்று நற்கருணை ஆராதனை நடைபெற்றது. நேற்று மும் மொழிகளிலும் திருப்பலி பூஜைகள் நடை பெற்றன.

Related posts: