பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!.

Tuesday, January 16th, 2024

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் கம்பஹா உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் நேற்று (15) உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் மினுவாங்கொட தேர்தல் தொகுதிகளின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க –

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியினர் என்ன செய்வார்கள் என அனைவரும் கேட்கின்றனர். மொட்டு இன்னும் வேட்பாளரை தெரிவு செய்யவில்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

வேட்பாளரை முன்வைப்பதா? இல்லையா? என்பது குறித்து கட்சி இன்னும் ஆலோசித்து வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நாட்டை ஆள்வதற்கான மிக உயர்ந்த தகுதிகளை அவர் பெற்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடும் அதன் மக்களும் மிகவும் சோகமான விதியை எதிர்கொண்டனர். மக்கள் வரிசையில் நின்று கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் அன்று இருந்த பல பிரச்சினைகள் இன்று தீர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த நாட்டு மக்கள் எப்போதும் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் அடிப்படையிலேயே ஜனாதிபதிகளைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டு போரில் வெற்றி பெறுவதற்காக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். 2019 இல் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று தேசிய பாதுகாப்பை உறுதி செய்தார். எனவே நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க இன்று ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க விரும்புகின்றோம்.

எனவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டால், கூட்டணியில் உள்ள கட்சியாக அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறேன். தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் “தேசிய வேட்பாளராக” போட்டியிட வேண்டும்.

இப்போது ஜனாதிபதி வேட்பாளர்கள் மழை பொழிகிறார்கள். பல்வேறு தேசத்தில் இருந்து வேட்பாளர்கள் வருகின்றனர். ஒரு பெட்டிக்கடை அல்லது நிறுவனத்தை நீங்கள் கட்டுப்படுத்துவது போல் ஒரு நாட்டை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.

யார் வேண்டுமானாலும் பெருமை பேசலாம். ஆனால் எல்லோரும் வேலை செய்ய முடியாது. பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஜனரஞ்சக அரசை நிறுவுவதற்கும் எமக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. எனவே, மற்ற வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்க நாங்கள் வாய்ப்பளிக்கவில்லை.

இது சோதனைக்கான நேரம் அல்ல. தற்பெருமை காட்டாமல் உழைக்கும் எதிர்காலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. எனவே தற்போதைய ஜனாதிபதியே தற்போது ஜனாதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: