பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள் அதிகரிப்பு!

Friday, June 15th, 2018

கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகுவது மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுமார் ஆயிரத்து 88 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 336 பேரைக் கொண்ட ஓர் பிரதேசமாக கோணாவில் காணப்படுகின்றது. அங்குள்ள அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றி வறிய குடும்பங்களாக உள்ளன. குறிப்பாக இந்த பிரதேசத்தில் வாழும் அதிகளவான குடும்பங்கள் அக்கராயன் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைகளின் போது தொழில் வாய்ப்புக்களைப் பெறுகின்றவர்களாக உள்ளனர்.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோகச் செய்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் தொழில் வாய்ப்புக்கள் அற்ற நிலையில் கோணாவில் யூனியன் குளம் புதிய குடியிருப்பு பகுதிகளிலுள்ள அநேகமான குடும்பங்கள் உள்ளன.

அத்துடன் குடும்ப வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் காரணமாகவும் பிரிந்து வாழும் குடும்பங்களும் யுத்தத்தினால் கணவன்மாரை இழந்த காணாமல் போன பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

இவ்வாறான வறுமை நிலை காரணமாக இப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைக் கல்வியைத் தொடர வேண்டிய வயதிலுள்ள கூடுதலான சிறார்கள் பாடசாலைக்குச் செல்லாத நிலையில் உள்ளனர்.

இச் சூழலில் உள்ள பாடசாலைகளான அக்கராயன் மகாவித்தியாலயம் கோணாவில் மகாவித்தியாலயம் யூனியன் குளம் பாடசாலை கோணாவில் ஆரம்பப் பாடசாலை போன்ற பாடசாலைகளில் கணிசமான மாணவர்கள் ஒழுங்கற்ற வரவுகளைக்கொண்ட மாணவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இப் பகுதிகளில் காணப்படுகின்ற இவ்வாறான சிறார்களை பாடசாலைகளில் சிறார்களை பாடசாலைகளில் மீளக்கற்றலில் இணைக்க முயற்சிக்கின்ற போதும் அந்தக் குடும்பங்களினுடைய வறுமை நிலை தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்றும் பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts: