பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – ஜனாதிபதியால் அரசின் கொள்கைப்பிரகடனமும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Monday, January 17th, 2022

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க உள்ளார்.

முன்பதாக நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அனுமதித்துக்கொண்ட பின்னர் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிவரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.

இருந்தபோதிலும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18 ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டால் அது மீண்டும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட வேண்டியது நாடாளுமன்ற சம்பிரதாயமாகும்.

இந்நிலையிலேயே அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அத்துடன் நாளையதினம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைப்பதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது. என்றாலும் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதன் பிரகாரம் நாளையதினம் ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்துக்கு வருவதற்கு முன்னர் காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் ஆரம்பமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவுள்ளார். அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையும் அதனை அடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் வருகையும் இடம்பெறும். சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை ஆசிர்வதிக்கவுள்ளனர். அதனை அடுத்து படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவிப் படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபை நடுவால் சபாநாயகர் ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதனையடுத்து ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கபடும். கொள்கை பிரகடனம் நிறைவடைந்த பின்னர், நாடாளுமன்றம் மறுநாள் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படும். இதேவேளை, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இதுவரை 25% நெல் கொள்வனவு – பங்குனியில் மேலும் அதிகரிக்கும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் உபதலைவர் ...
மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் - சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!
அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்ட பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் அ...