தீர்ப்புகள் பாதுகாக்கும் கேடயங்களாக அமைய வேண்டும் !

Thursday, July 7th, 2016
போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை இழைத்தோரின் கருணை மனு நிராகரிக்கப்படும் என  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சட்ட விளைவுகள் தெரியாமல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைப் புரிவோரின் கருணை மனுக்கள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டாது என்பதுடன் பிணை கோரி செய்யப்படும் அத்தகைய மனுக்களும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தும் குற்றத்தை புரிவோருக்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் இருந்து கொண்டு வந்ததாகக் கருதப்படுகின்ற 39 கிலோ கஞ்சாவை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் ஒருவர், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பினை மனு மீதான விசாரணையின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

மிகவும் சொற்ப அளவு என்று கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின், மோபின், கொக்கெயின் போன்ற போதைப் பொருளை ஒருவர் தனது உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று போதை வஸ்து சட்டத்தின் 54 ஆம் பிரிவு பரிந்துரை செய்கின்றது.

அதேவேளை, 5 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவை வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்திருந்தால் 7 ஆண்டுகள் வரை கடூழியச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

போதைப் பொருள் குற்றம் தொடர்பான இத்தகைய விடயங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்பட்டு, தண்டனை தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என போதை வஸ்து தண்டனைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டு கடற்கரையோரங்களில் பெருமளவான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றைக் கடத்தி வந்த சந்தேகத்தில் பலர் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்வதை அனுமதிக்க முடியாது.

யாழ் குடாநாடு போதை வஸ்து இல்லாத சாம்ராச்சியமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றின் இலக்காகும். நீதிமன்றத் தீர்ப்புக்கள் மக்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக மாற வேண்டும்.  போதைவஸ்து உடைமையில் வைத்திருப்பது, அதனை விற்பனை செய்வது அதனைப் உட்கொள்வது போன்ற குற்றச் செயற்பாடுகளை யாழ் குடாநாட்டில் அனுமதிக்க முடியாது. அதனால்தான் யாழ் மேல் நீதிமன்றம் போதைவஸ்து வழக்குகளில் மிகவும் கடும் போக்கு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றது என்றார்.

Related posts: