சுகாதார நலன் பேணாது உணவு வகைகளை விற்பனை செய்தவருக்கு அபராதம் விதிப்பு!

யாழ்.அச்சுவேலிப் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டமை மற்றும் சுகாதார நலன் பேணாது உணவுகளை விற்பனை செய்த உரிமையாளர்களுக்கு எதிராக அதிகூடிய அபராத தொகையினை விதித்து மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
அச்சுவேலி இராசா வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான உணவினை விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு 15ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் உணவகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தமை போன்ற ஏனைய 15 குற்றச்சாட்டுக்கள் மீதான வழக்கிற்கு எதிர்வரும் டிசம்பர் வழக்கினை தவணையிட்ட நீதவான் குறித்த கடை உரிமையாளரை 2லட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதித்தார். மற்றும் அச்சுவேலிப் பாடசாலைப் பகுதியிலுள்ள கடை ஒன்றில் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உணவக உரிமையாளருக்கு எதிராக தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நகரப்பகுதியிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் சரியான முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்த தவறியமை பாவனையாளர் நலன்பேணாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்துள்ளார். அதேபோல் தோப்பு பகுதியிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் தொப்பி, ஏப்ரன், இன்றி வெதுப்பக பொருட்களை உற்பத்தி செய்தவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.
Related posts:
|
|