சம்பந்தன் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது – வாசுதேவ நாணயக்கார
Monday, May 23rd, 2016
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கையாகவுள்ளது.. வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணி ஆதரவு பொது எதிர்க்கட்சி எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும்தெரிவிக்கையில் –
தமிழர் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்பட வேண்டும். எமது அரசியலமைப்பும் ஒற்றையாட்சியையே வலியுறுத்துகின்றது.
எனவே இதனை மீறி தீர்வை வழங்க முடியாது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினாலும் ஒற்றையாட்சியை மீறி மக்கள் சமஷ்டிக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள்.
ஜனாதிபதி ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற அடிப்படையிலேயே உள்ளார். ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே. கட்சிக்கு மக்களையும் நாட்டையும் பிரித்தாளும் தேவையே மேலோங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரிவினைக்கான சமஷ்டியையே ஆதரிக்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனவே தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வடமாகாணம் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
நான் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவில்லை. தம்மைத் தாமே ஆளும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன். இதன் மூலம் அதிகாரப் பரவலாக்கல் வலிமை பெறும்.
தம்மைத் தாமே ஆளும் அதிகாரத்தால் அந்த மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது இலகுவாக அமையும் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|