கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு நிரந்தர கட்டடம் – வட க்கின் ஆளுநர்!

Thursday, August 18th, 2016

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு விரைவில் நிரந்த கட்டடம் அமைக்க மத்திய  அரசுடன் பேசி நடவடிக்கை மெற்கொள்ளப்படும் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளதாக சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் அ.யேசுராஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் தற்கொலிக கொட்டில்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வர்த்தகர்கள் தங்களுக்கு நிரந்தர சந்தைக் கட்டடத்தை அமைத்து தருமாறு கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் கையளித்த போதே  ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தை வர்த்தகர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மகஜரை  ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்கு பதிவுத் தபாலிலும், வட மாகாண முதலமைச்சர்,ஆளுநர் ஆகியோருக்கு நேரடியாகவும் கையளித்துள்ளனர்.

அவர்கள் தங்களுடைய கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது –

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய சந்தையாகவுள்ள கிளிநொச்சி கரைச்சி பொதுச் சந்தையில் மரக்கறி,மீன் உள்ளிட்ட சில வியாபார துறைகளுக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெற்றிலை,தேங்காய்,பழம் வியாபாரிகளுக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் புடவை,அழகுசாதனம், காலணிகள்,பல்பொருள், தேனீர் உள்ளிட்ட  வியாபார துறைகளுக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு வருட ஆயுளை கொண்டதாக கடந்த அரசாங்கத்தினால் அமைத்து தரப்பட்ட தற்காலி கொட்டில்களில் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றோம். குறித்த தற்காலிக கொட்டில்களும் வருகின்ற பருவமழையை தாங்கி நிற்குமா என்பது கேள்விகுறியே. எனவே எமக்கான நிரந்தர கட்டடத்தை அமைத்து தாருங்கள் என அவர்கள் கோரியுள்ளனர்.

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினால்  எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சந்தை வியாபாரிகள் தங்களுக்கான நிரந்தர கட்டடமே வாழ்வாதாரத்தை முன்னேற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வட மாகாண ஆளுநர் தங்களுடைய கோரிக்கை கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் சந்தை நிலவரம் தொடர்பில் விரிவாக தங்களுடன் கலந்துரையாடியதாகவும், விரைவில் புதிய நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் பேசி மேற்கொள்ளவதாக தெரிவித்ததாக கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் அ.யேசுராஜன் தெரிவித்துள்ளார்

Related posts: