கிளிநொச்சியில் நீர்த்தாங்கி விடுவிக்கப்படுகின்றது!

Saturday, May 27th, 2017

கிளிநொச்சி நகரில் பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் 30 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சியில் உள்ள படையினர் பாதுகாத்து வந்த நிலையில் பெருமளவான தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிடுவது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கு இராணுவத்தினர் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி தொடர்பில் விளக்கமளித்து வந்தனர்.

இந்நிலையில் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் காணப்பட்ட பலவற்றை அபிவிருத்தி செய்த அரசு,  நீர்த்தாங்கியை மாத்திரம் யுத்த அழிவுச் சின்னமாக பேணியமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெற்ற பல கூட்டங்களிலும் இது தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.இந்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த நீர்த்தாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால் கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனை பிரதேச செயலகம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: