ஏ.டி.எம்.அட்டை மூலம் ரூ.பல லட்சம் சுருட்டிய இலங்கையர் தமிழகத்தில் கைது!
Friday, September 30th, 2016
வங்கி வாடிக்கையாளர்களை அதிகாரி போல் தொடர்பு கொண்டு, ஏ.டி.எம்.அட்டை இரகசிய எண்ணை அறிந்து, ‘நெட் பேங்கிங்’ முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இலங்கை நபரொருவரை தமிழகப் போலிசார் கைது செய்தனர்.
தமிழகம், காரைக்குடியில் நடந்து வரும் தொடர் திருட்டை தொடர்ந்து, விடுதிகளில், நேற்று முன்தினம் இரவு டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.நுாறடி ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் சோதனை செய்த போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்தவனை விசாரித்தனர்.
அவன் இலங்கையை சேர்ந்த விமலன், 40. அவனது மாமியார் வீடு காரைக்குடி, உதயம் நகரில் உள்ளது. சென்னையில் வசித்து வந்தவன், ஆறு மாதத்துக்கு முன் காரைக்குடிக்கு வந்துள்ளான்.தனியார் விடுதியில் மாத வாடகைக்கு அறை எடுத்து தங்கி, தனியார் லாக்கரில், ‘அக்கவுண்ட்’ தொடங்கியுள்ளான். அங்கிருந்து அலை பேசி மூலம் வங்கி வாடிக்கையாளர்களிடம், அதிகாரி போல் பேசி, ஏ.டி.எம்.அட்டை இரகசிய எண்ணை பெற்று, ‘நெட் பேங்கிங்’முறையில் பல லட்சம் ரூபாயை மோசடி செய்து எடுத்துள்ளான்.
எடுத்த பணத்தை உடனுக்குடன் லாக்கரில் வைத்துள்ளான். ஏ.டி.எம்.அட்டை தயார் செய்வதில் கை தேர்ந்தவன்.’சார்ட்’ என்ற இணைய தளம் மூலம், இந்த இணையதளத்தில் உள்ள லண்டன் மற்றும் பல நாடுகளை சேர்ந்த நபர்களுடன் தொடர்பு கொண்டு ஏ.டி.எம்., கார்டுகளின் இரகசிய தகவல்களை பரிமாறியுள்ளான்.
அவ்வப்போது விடுதியையும், ஊரையும் மாற்றியுள்ளான். அவனிடம் உள்ள மடிகணனியில் இந்த இணையதளத்தில் யார் யார் உள்ளனர், என்பது குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.பணத்தை எடுத்த உடன், சதவீத அடிப்படையில் அவனுக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.அவனது அறையில் இருந்த, 48 ஏ.டி.எம். அட்டைகள், லாக்கரில் இருந்த, 26 லட்சம் ரூபாய், நகை, மடிகணனி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவனை இரகசிய இடத்தில் வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related posts:
|
|