தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்குவது தமிழ் தேர்தல் நாடகம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Tuesday, September 24th, 2019


ஆட்சி அதிகாரத்திற்கு முண்டுகொடுத்து நான்கரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட நலன்களில் அக்கறை செலுத்தியிராத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக நியமனங்களை அனுப்பி வைப்பதானது எமது இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் அரசியல் நாடகமாகவே காணப்படுவதாக  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மைய சில தினங்களாக யாழ் குடாநாட்டில் பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நியமனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு வருடத்துக்கான நிபந்தனையின் கீழான நியமனமாகவும் அதை நிரந்தரமாக்க முடியாது என்றும் வலியுறுத்தியதாக அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையை ஊதியமாக கொண்டதாக கூறப்பட்டுள்ள குறித்த நியமனப்பத்திரத்தில் தேர்தல் கால செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் விதமானதாகவே அது காணப்படுகின்றது.

தேர்தல் அறிவிக்கப்பட்டால் நியமனங்கள் வழங்குவதோ அன்றி அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை செய்வதோ சட்டவிரோதமானதாக அமையும். ஆனால் போலியானதும் ஏமாற்றும் வகையிலானதுமான நியமனங்களை தேர்தல் காலத்தில் வழங்க முற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்டந்தும் எமது இளைஞர் யுவதிகளை ஏமாற்றுவதற்கே முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த காலங்களில் நம் எமது இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருந்தபோது எந்தவித பாரபட்சங்களையோ அன்றி ஏமாற்றும் நடவடிக்கைகளையோ மேற்கொண்டது கிடையாது.  அதுமட்டுமல்லாது எமது மாவட்ட தொழில் வெற்றிடங்களுக்கு எமது இளைஞர் யுவதிகளைக் கொண்டே பணியாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்திருந்தோம்.

ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயநலன்களுக்காக எமது மக்களின் தொழில் வாய்ப்புக்கான உரிமைகளை பிற மாவட்டங்களுக்கு வழங்க இடங்கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது நியமனங்களில் எமது மாவட்ட இளைஞர் யுவதிகளை முற்றாகவே புறக்கணிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமைகளை இல்லாதொழித்து எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கே எமது பிரதேசங்களிலுள்ள பணிநிலை வெற்றிடங்களுக்கு நிரப்பப்பட வெண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதை நாம் இனவாத ரீதியில் கூறவில்லை. எமது பகுதியில் பெரும்பாலானவர்கள் தொழில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கும் நிலையில் பிற மாவட்டத்தவருக்கு இங்கு பணிநிலை நியமனங்களை கொடுப்பதை நாம் விரும்பவில்லை. இதற்கு கடந்த காலத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது இடம் கொடுத்திருக்கவும் இல்லை.

அந்தவகையில் இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டுமானால் வரவுள்ள சந்தர்ப்பங்களை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.

Related posts:


சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? - நாடாளுமன்றில் செயலா...
தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன...
தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில...