வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது : கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Wednesday, January 23rd, 20191983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க விரும்புகின்றேன். அதேபோன்று, கண்டி மற்றும் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றும் அவை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவே கூறிய போதிலும், அவை தொடர்பில் இதுவரையிலும் எந்தத் தகவல்களும் இல்லை. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன் என்பதால், அந்த வேதனைகளை நான் நன்கறிவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற கடன் இணக்க சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் ஊடகங்கள் வாயிலாக அத் தாக்குதலின் ஊஊ வுஏ காணொளிக் காட்சிகள் பகிரங்கப்படுத்தி இருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் இரு விசாரணைக் குழுக்களை நியமித்து, அதன் ஒரு குழுவின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
‘சிறைக் கைதிகளும் மனிதர்கள்” என சிறைச்சாலைகளின் வெளிச் சுவற்றில் வெளியில் இருப்போருக்குக் காட்டிக் கொண்டு, உள்ளே நிர்க்கதியாக இருக்கின்ற சிறைக் கைதிகளைத் தாக்குவது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத மோசமான செயலாகும்.
எனவே, மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் எவ்விதமான விடயங்களை முன்வைத்திருக்கின்றனவோ தெரியாது. எனினும், இத்தகைய மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள், இனிமேல் இவ்வாறு வேறொரு சம்பவம் நிகழாதிருப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
Related posts:
|
|