வடக்கு – கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவற்றுக்குத் துணை போகின்றனர் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!
Wednesday, May 23rd, 2018வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், காடழிப்புகள், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மிக மிகத் தாராளமாக நடந்தேறுகின்ற நிலையில், அவற்தை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகளே அவற்றுக்குத் துணை போகின்ற நிலையில், விவசாய நிலங்களில் இயற்கையாக அதிகளவில் வளரக்கூடிய சுண்ணக்கற்களை பயிர்ச் செய்கைக்காக அகற்றும்போதும், அவற்றை அப்புறப்படுத்தும்போதும், அந்தக் கற்களை விற்று அன்றாடம் தங்களது வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்வதற்கு முயற்சிக்கும் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆயிரக் கணக்கில் தண்டப் பணங்களைச் செலுத்தவதற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தின் பல்வேறு விவசாய நிலங்கள் இன்று உவர்நீர்த் தளங்களாக உருமாறி வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் நான் பலமுறை இந்தச் சபையிலே எடுத்துக் கூறியிருக்கின்றேன். நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரையில் சாத்தியமாக்கப்படவில்லை.
இத்தகைய காரணங்களால் எமது மக்கள் இப்போது குடியிருக்கின்ற பகுதிகளை விட்டும் வெளியேறி வருகின்ற நிலையில், நீங்களும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு காணி, நிலங்களை கையகப்படுத்திக் கொண்டால், எமது மக்கள் என்ன செய்வார்கள்? என்பது பற்றி நீங்கள் சற்று மனிதாபிமான ரீதியிலாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|