அமெரிக்க இராணுவப் படைத்தளம் வட – கிழக்கில் அமையப் போகின்றதா? – டக்ளஸ்; எம்.பி. கேள்வி!

Friday, August 9th, 2019

காலத்திற்குக் காலம் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பில் காரசாரமாகப் பேசப்பட்டு வருவதும், பின்னர் அது மறந்துவிடுவதும், அத்தகைய ஒப்பந்தங்கள் காரணமாக பாரிய பாதிப்புகளுக்கு நாடு முகங்கொடுப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், இலங்கை – சிங்கப்பூர் ஒப்பந்தம் இந்த நாட்டில் ஏற்படுத்திய பதற்ற நிலைக்குப் பின்னர் தற்போது இந்த இலங்கை – அமெரிக்காவிற்கிடையில் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டள்ளது எனக் கூறப்படுகின்ற சோபா – SOFA – ஒப்பந்தம் தொடர்பில் தற்போது ஒருவித பதற்றநிலை ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்பவற்றுடன் அரசாங்கம் / அரசாங்க முகவர் நிறுவனங்கள் என்பன செய்து கொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல்’ பற்றிய சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில் –

இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ – Status of Forces Agreement – SOFA – – என்று இனங்காணப்படுகின்ற இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கையில் வெளிநாட்டுப் படைத்தளமொன்றுக்கு வழிவகுக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கையர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்ற நிலையில், அமெரிக்க படைத்தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் தங்களுக்குக் கிடையாது எனவும், இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே அது காணப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்தள்ளதாகக் கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம் என வரும்போது, வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது எனக் கூறுவதை இந்த நாட்டு மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தென் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நிலையில், இத்தகைய அமெரிக்க இராணுவப் படைத்தளத்தினை வடக்கு – கிழக்கு பகுதிகளில் அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் தற்போது எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகளவில் காணப்படுகின்ற பிறநாடுகளின் பிரசன்னங்கள் காரணமாகவும், அமெரிக்காவுக்கான ஏனைய நாடுகளுடனான இராணுவமயத் தேவைகள் காரணமாகவும் இலங்கையில் படைத்தளமொன்றை அமைப்பதில் அதிக பயன்கள் அமெரிக்கா அடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் தேவையை இந்த நாட்டில் வலுப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா மேற்கொள்கின்ற நடவடிக்கைளின்போது, அதற்கு வழிவிடவும், தென்பகுதியில் அதற்கான எதிர்ப்பினைச் சமாளிப்பதற்குமாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் இதற்கெனப் பலியாக்கப்படலாம் என்ற சந்தேகமே இப்போது எமது மக்களிடையே காணப்படுகின்றது.

இதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன என்றே கருத வேண்டி இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த மாதம் 05ஆம் திகதி அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் காணிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், கடற்கரைப் பகுதியினையும் கண்காணித்துள்ளனர்.

இவர்களது இந்த விஜயம் பற்றி வடக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டபோது, இது பற்றி தனக்குத் தெரியாது என்றும், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அதேநேரம், கொழும்பிலிருந்து கிடைத்த தொலைபேசி உத்தரவுக்கு அமையவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத் தரப்பிலிருந்து கூறப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: