வடக்கில் மீண்டும் ஸ்கின் டைவிங் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதி – கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து!

Friday, November 13th, 2020

வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை(16.11.2020) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த அனுமதியானது ஸ்கின் டைவிங் எனப்படும் சாதாரண சுழியோடி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்கியூபா எனப்படும் சிலிண்டர் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் ஒன்றாக வடக்கு கடலில் கடலடை பிடிப்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொறோனாவை கட்டுப்படுத்துவதற்கு முழு நாட்டையும் முடக்காமால் அடையாளப்படுத்தப்படுகின்ற பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்துவன் ஊடாக கட்டுப்படுத்துவது என்ற அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானத்திற்கு அமைவாக, கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை நிபந்தனையுடன் வழங்குமாறு கடற்றொழில் அமைச்சர், மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவதாக தனக்கு தகவல்கள் கிடைப்பதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்துகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள்  தொடர்பான இருநாடுகளுக்கும் இடையிலான அமைச்சு மட்டக் கலந்துரையால் விரைவில் நடைபெறவுள்ளதனால், எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தொடர்பான பதிவுளை தனக்கு சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தார்

Related posts:


எமது கட்சியின் அரசியல் வழிமுறைப்பாதையே சரியானதென வரலாறு நிரூபித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தொடர்ந்து துரோகம் செய்கின்றது: வவுனியாவில் டக்ளஸ் எம் பி சுட்டிக்காட்டி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி - 52 தொழில் முனைவோருக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீ...