வடக்கில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பொருளாதார  வீழ்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 2nd, 2016

நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களது பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாது மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளான நிலையே வடக்கு மாகாணத்தின் வர்த்தக பொரளாதார நிலை காணப்படுகின்றது. இதை மீழெழுச்சி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் –

எமது நாட்டில் வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், நுகர்வுத் தளம் – முதலீட்டுத் தளம் என்பவற்றில் போதியளவு மாற்றங்கள் ஏற்பட்டதும், அந்த உடன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒரு புறம் சுமார் 30 வருட காலங்கள் முடக்கப்பட்டிருந்த அத்தியாவசியத் தேவைகள் போதியளவு விஸ்தீரணப்படுத்தப்பட்டதும், அதற்குப் புறம்பான ஏனைய பொருட்களுக்கான தேவையானது மிகைப்படுத்தப்பட்டதுமான ஒரு நுகர்வுத் தளம் வளர்ச்சி பெற்றது.

நீண்ட காலமாக கவனத்தில் கொள்ளப்படாதிருந்த பௌதிக கட்டுமாணங்களின் மேம்பாடுகள், வெளி மாவட்டங்களுக்கான தரைப் போக்குவரத்து விஸ்தீரணம் பெற்றமை, மின்சார வசதிகள் 24 மணி நேரமும் உறுதிபடுத்தப்பட்டமை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்ற காரணிகள் இந்த நுகர்வுத் தளத்தை விஸ்தீரணப்படுத்துவனவாக அமைந்தன.

அதே நேரம், இழந்தவற்றை மீளச் சேகரித்துக் கொள்வதும், ஏனைய தேவைகளை ஈட்டிக் கொள்வதும் எமது நுகர்வோரின் எண்ணப்பாடாகவும் அமைந்திருந்தன.

இதன் காரணமாக, இந்த நுகர்வுத் தேவையை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகச் செய்கைகள் திடீர் வளர்ச்சி பெற ஆரம்பித்தன. இதில், அப் பகுதி வர்த்தகர்கள் நேரடியாகவும், அப்பகுதி சாராத வர்த்தகர்கள் நேரடியாகவும், விநியோகத் தளத்தை அப்பகுதி வர்த்தகர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்ட செய்கைகளும் வளர்ச்சி பெற்றன.

இதனூடாக இந்த இரண்டு தரப்பினரும் அங்கு வளர்ச்சி பெற்றிருந்த, திடீர்ப் பொருளாதாரச் சந்தையின் பயன்களைப் பெற்று வந்தனர். எனினும், இந்த நுகர்வு அலையானது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. இந்த நிலையில் நுகர்வுத் தேவைகளின் படிப்படியான வீழ்ச்சி காரணமாக, எமது வர்த்தகப் பொருளாதாரமும் வீழ்ச்சி காண ஆரம்பித்து விட்டது.

இந்த வீழ்ச்சியானது தற்காலிகமானது என எதிர்பார்த்து – அரச வங்கிகளின் ஊடாக கடன் பெற்று, கையிருப்புகளை குறைவில் வைக்காது அதன் மிகைக் களஞ்சியத்தைப் பேணியவர்களும், இதற்கென அரச வங்கிகள் கடன்களை மறுத்த நிலையில், வேறு நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று, மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களும், மேற்படி பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாத நிலையில், மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்ட ஒரு நிலையே வடக்கு மாகாணத்தில் நிலைத்துக் காணப்படுகின்றது என்பதை இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

1314195337B2 copy

Related posts:

யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர...
கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்...
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பொதுப் பவனைக்கு வரும் – அமைச்சர் டக்ளஸ் ...

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்!  - டக்ளஸ் தேவானந்தா
யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் சாதனைகள் தொடர வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!
இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் - தோழர்கள் ம...