யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முழங்காவில் பகுதி மக்கள் கோரிக்கை!
Thursday, June 30th, 2016கடந்தகால யுத்தத்தின் தாக்கத்திற்கு முகங்கொடுத்த எமது பகுதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் தற்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் இங்குவாழும் மக்களாகிய நாம் பல தேவைப்பாடுகளையும் உதவிகளையும் தேடியவண்ணம் வாழ்ந்துவருகின்றோம் அந்தவகையில் தமிழ் மக்களது உரிமை மற்றும் அபிவிருத்தி விடயங்களில் இற்றைவரை பாரபட்சமின்றி சேவை மனப்பாங்குடன் பணியாற்றிவரும் உங்களிடம் எமது எதிர்கால வாழ்வியலுக்கான வழியை எதிர்பார்த்து நிற்கின்றோம் என முழங்காவில் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்
முழங்காவில் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்றையதினம்(29) நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்து பிரதேச மக்களது குறைநிறைகளை கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமே குறித்தபகுதி மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதி நிர்வாக செயலாளர் ரட்ணம் அமீன் தலைமையில் நடைபெற்ற குறித்த மக்கள் குறைகேள் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –
எமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பிலோ மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலோ வடக்கு மாகாணசபை எவ்வித அக்கறையுமற்று இருக்கின்றமை எமக்கு மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் தருகின்றது. அத்துடன் எமது பகுதிக்கு எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக வருகைதந்து எமது பிரச்சினைகள் அவலங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கோ அல்லது தீர்வு காண்பதற்கோ இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கமுன்வரவில்லை.
கடந்த காலங்களிலும் எமது பகுதி மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்வுகளை பெற்று தந்திருந்த நீங்கள் தற்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவதானித்து தீர்வுகாணும் பொருட்டு நேரில் வருகைதந்தமைக்கு மக்களாகிய நாம் என்றும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்கின்றோம் என்றும் அந்த மக்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் தமது பகுதியின் போக்குவரத்து வீதிகள் மற்றும் உள்ளக வீதிகள் செப்பனிடப்படாமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருகைதரும் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் பூநகரி வடக்கு பகுதியில் குடிநீர் பிரச்சினை காரணமாக பல பாடசாலைகள் செயலற்றுப்போவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் இதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடி தேவைகளை ஏற்பாடு செய்து தந்து பாடசாலைகளை தொடர்ந்தும் இயங்க செய்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாதிருக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுதருமாறும் கோரிக்கை விடுத்தனர்
அத்துடன் தமக்கான வீடமைப்பு வசதி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம், தொழில் வாய்ப்புக்கான உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட அடிப்படை வசதிகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் கோரிக்கைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அவை தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தவநாதன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதி நிர்வாக செயலாளர் ரட்ணம் அமீன், யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|