வேலணையின் அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான ஊரி அகழ நடவடிக்கை!

Wednesday, March 8th, 2023


யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வேலணை பிரதேசத்தில் ஊரி அகழ்விற்கு பெ்ருத்தமான இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கை துறைசார் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வேலணை பிரதேச சபையின் உள்ளக வீதி புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளுக்கு ஊரியின் தேவை காணப்பட்டபோதும் அதற்கான அனுமதி கடந்த காலங்களில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் தற்போது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பொறுப்பெற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேலணை பிரதேச சபையின் செயலாளர் தியாகச்சந்திரன் தெரியப்படுத்தியிருந்ததுடன் ஊரி போதியளவு இன்மையினால் பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் செயலாளரின் கோரிக்கையின் அவசியத்தினை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அபிவிருத்தி பணிகளுக்கு தேவையானளவு ஊரியை அகழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று (08.03.2023) சம்பந்தப்பட்ட திணைக்களங்களான கனியவளத்திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம், வேலணை பிரதேச சபை போன்றவற்றின் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் புங்குடுதீவு, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு போன்ற பிரதேசங்களுக்கு களவிஜயம் செய்து ஊரி பெறுவதற்கு சாதகமான தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஊரி அகழ்விற்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
000

Related posts: