தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்கா லத்தை உருவாக்குவோம் – கட்சியின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்கள் மத்தியில் செயலாளர் நாயகம்!
Sunday, November 19th, 2017கடந்த காலங்களைப் போலல்லாது இன்று மக்களின் மனங்களில் ஒரு தெளிவுடன்ட கூடிய மாற்றம் தேன்றியுள்ளது. இது எமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் மாற்றமாகவே காணப்படுகின்றது. இந்த மாற்றத்தை நாம் எமக்கானதாக வென்றெடுத்து தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை (19) நடைபெற்ற கட்சியின் வடக்கு – கிழக்கு பிராந்தியத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் ஒரு பகுதி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் போலித் தேசியவாதங்களுக்குள் முடக்கப்பட்டுக்கிடந்த மக்கள் இன்று அவர்களது போலித்தனங்களை விளங்கிக்கொண்டுள்ளனர். அத்துடன் தமக்கான அரசியல் ரீதியான மாற்றத்தையும் சிந்திக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் அழிந்துகிடந்த காலப்பகுதியில் நாம் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு 10 சபைகளை வெற்றிகொண்டதன் பயனாக அபிவிருத்தியின்றி காணப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கிக்கொடுத்திருந்தோம்.
ஆனால் அதன்பின்னரான காலப்பகுதியில் போலித் தேசியவாதமும் அச்சுறுத்தல்களும் மக்களிடம் மேலோங்கியதால் மக்கள் தம் வாழ்வியலிலும் இன்னோரன்ன பல துன்ப துயரங்களை சுமந்து வாழவேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.
ஆனால் இன்று மக்களிடம் ஒரு மாற்றம் உருவாகியுள்ளது. இதன்மூலம் மீண்டும் தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் ஒரு பொற்காலத்தை உருவாக்குவதற்கு வழிவகுப்பார்கள் என நம்புகின்றோம்.
நாம் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் சென்று வீர வசனங்கள் பேசும் கூட்டத்தினர் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால்தான் நாம் ஜதார்த்தமானவற்றை மக்களிடம் எடுத்துச்சொல்லி வருகின்றோம்.
எமக்கென்றொரு கனவு உண்டு. அது எமது மக்கள் அனைத்து உரிமைகளுடன் தலைநிமிர்வுடன் இந்த நாட்டில் வாழக்கூடிய நிரந்தரத் தீர்வை எட்டுவதே ஆகும்.
வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெற்றிகொள்வதனூடாக அதற்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி மக்களது அபிவிருத்திகளையும் தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுக்கமுடியும்.
அத்துடன் இந்த தேர்தலூடாக எமது மக்கள் எமக்குத் தரும் அரசியல் பலத்தின் மூலம் தென்னிலங்கைக்கு எமது மக்கள் பலத்தை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்குள்ள இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணுவதற்கான ஒரு திறவுகோலாகவும் இந்த தேர்தலை நாம் உருவாக்கி கொள்ளமுடியும்.
வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாம் தனித்தே எமது வீணைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஆனாலும் பிராந்தியத்தில் உள்ள கட்சிகள் சிலவும் தேசியக் கட்சிகள் சிலவும், முற்போக்கு சக்திகளளும் எம்முடன் இணைந்துகொள்ள விரும்பி பேச்சுக்களை நடத்திவருகின்றனர். அவர்களையும் வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.
எனவே வரவுள்ள தேர்தல் எமக்கானதே. அதை நாம் வெற்றியுடன் எதிர்கொள்ள தயாராவோம் – என்றார்.
Related posts:
|
|