யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Monday, April 30th, 2018ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் உள்ள இடர்பாடுகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் ஊர்காவற்றுறை வழித்தடம் 780 மற்றும் 777 ஆகிய தனியார் போக்குவரத்து சேவை பேருந்துகளின் அங்கத்தவர்கள் ஆகியோர் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் மெலிஞ்சிமுனை பிரதான வீதி புனரமைப்பு மற்றும் அனலைதீவு படகுச் சேவைக்கான பேருந்து சேவை ஆகியவற்றின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்து சேவையிலேற்படும் தாமதம் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் சரியான தீர்வுகளைக் கண்டு மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கவேண்டும். ஏனெனில் தீவகப் பகுதிகளுக்கு பொதுவாக குறைந்தளவான பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உரிய நேரங்களுக்கு குறித்த இடங்களுக்கு செல்வதற்கு பேருந்துகளின் சேவை அவசியமானது என்பதையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
இதன்போது ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் ஜெயகாந்தன் உடனிருந்தார்.
Related posts:
|
|