மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 27th, 2016

அரசின் மீள் குடியேற்றம் தொடர்பான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்திற்குத் தடையாக அமையாமல், எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். இதற்கு, எமது மக்களின் நிலையறிந்த வகையிலான நிபந்தனைகளே உட்படுத்தப்பட வேண்டுமேயொழிய, நிபந்தனைகளை வகுத்துவிட்டு, அந்த நிபந்தனைகளை எமது மக்கள் மீது திணிப்பதால் மீள் குடியேற்றம் ஒருபோதும் சாத்தியப்படப் போவதில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசுக்குத் தெரிவித்தள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அண்மையில் மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு அன்ரனிபுறம் பகுதியில் பாரிய மண் அரண்கள் இருப்பதால் அப் பகுதி கடற்றொழிலாளர்களால் சிறிய கட்டுமரங்கள் மூலமே தொழிலில் ஈடுபடக்கூடியதாக இருப்பதாகவும், இதன் மூலம் போதிய வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாதுள்ள நிலையில், காணிகளைத் துப்பரவு செய்தால்தான் வீட்டுத் திட்டம் தரப்படுமென அதிகாரிகள் கூறியதாகவும் தெரியவருகிறது.

பொருளாதார நிலையில் பல வருட காலமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இம் மக்களுக்கு தங்களது காணிகளைத் துப்பரவு செய்து கொள்ளக்கூட இயலாத நிலையே காணப்படுகின்றது. எனவே, இத்தகைய விடயங்கள் தொடர்பில் உதவிகளை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் எமது மக்களால் ஈடுகொடுக்க இயலாத சில விதிமுறைகளை மாற்றி, எமது மக்கள் மீள் குடியேற்றத்தின்பால் ஆர்வம் கொள்ளத்தக்க வகையிலான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் - செயலாளர் நாயகம் ...
யாழ். - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொட...