மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? – யாழில் ஊடகவியலாளர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
Saturday, June 16th, 2018மாகாணசபை முறைமையில் அதிகாரங்கள் இல்லை என்று கூறுபவர்கள் ஏன் வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முண்டியடிக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
மாகாணசபையை நாம் ஆதரித்தபோது அதில் ஒன்றும் இல்லை என்றும் விளக்குமாறால் கூட தொட்டுப்பார்க்க முடியாதென்றும் கூறி வடக்குமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டவர்களால் இதுவரையில் மக்களுக்காக என்னென்ன காரியங்களைச் செய்ய முடிந்துள்ளது.
எமது கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடக்கூடாதென்ற நோக்கில் மிக அக்கறையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்போது செயற்பட்டிருந்தது. ஆனாலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் கழிந்து சபையின் ஆட்சிக்காலம் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் வெறும் தீர்மானங்களை நிறைவேற்றியது மட்டுமன்றி வேறெதனையும் அவர்களால் சாதிக்க முடிந்திருக்கவில்லை.
தற்போது மாகாணசபையை நிர்வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் நிதி இல்லை என்றும் கூறியிருந்தார்கள். இருந்தபோதிலும் நிதி மோசடியிலும் அதிகார துஸ்பிரயோகத்திலும் இவர்கள் ஈடுபட்டுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மாகாணசபையிடம் அதிகாரம் இல்லை என்றவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தமது அதிகாரத்தை பயன்படுத்தவில்லையா? இவ்வாறாக கிடைக்கப்பெற்ற அதிகாரங்களையும் நிதிகளையும் உதாசீனப்படுத்திக்கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.
அத்துடன் வடக்கு மாகாண சபையில் அதிகாரம் இல்லை என்றால் ஏன் வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முண்டியடிக்கவேண்டும் எனவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|