மக்கள் திருப்தியடையும் வகையிலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
Thursday, June 16th, 2016அபிவிருத்திப்பணிகள் மக்கள் திருப்தியடையும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அதனூடாகவே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
செப்பனிடப்பட்ட வட்டுக்கோட்டை தெற்கு, கார்த்திகேய வித்தியாலய வீதியை டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (16) நேரில் பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்களுக்காகவும் சமூக மேம்பாட்டக்காகவுமே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப்பணிகள் மக்கள் திருப்தி அடையும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமானது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்தகாலங்களில் உள்ளக வீதிகள் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் குன்றும் குழியுமாகக் காணப்பட்டுவந்தன.
இந்நிலையில் கடந்த காலங்களில் நாம் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்துகொண்டு இணக்க அரசியல் மற்றும் அரசுடனான நெருக்கமான நல்லுறவின் மூலமாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் உள்ளக வீதிகள் பலவற்றை சிறந்தமுறையில் புனரமைப்பு செய்திருந்தோம்.
அவ்வாறாக நாம் புனரமைப்பு செய்த வீதிகள் தொடர்பில் மக்கள் நல் அபிப்பிராயம் கொண்டிருந்ததுடன் எம்மால் முன்னெடுக்கப்பட்ட சேவைகளுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இப்பகுதியில் அண்மையில் குறித்த வீதி புரமைப்பு செய்யப்பட்டுள்ளபோதிலும் புனரமைப்புப்பணிகள் குறித்த மக்கள் திருப்தி அடையாத மனோநிலையிலேயே காணப்படுகின்றனர் என்பது மனவேதனைக்குரிய விடயமாகும்.
புனரமைக்கப்பட்ட வீதியின் இருமருங்குகளும் சீரான முறையில் முழுமைப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும் இந்நிலை வரும் மழை காலங்களுக்கு எவ்வாறாக தாக்குப்பிடிக்கப்போகின்றது என்றும் மக்கள் அச்சமும் சந்தேகமும் தெரிவிக்கின்றனர்.
எனவே இதுவிடயம் தொடர்பில் துறைசார்ந்தவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), பிரதி மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|