மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, December 21st, 2017நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் மக்களுடைய ஆணையை பெற்று அவர்களுடைய பங்களிப்புடன் அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என ஈழமக்கள் ஜனகநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழில் தேசிய கீதம் ஒலிக்கவேண்டும் என்பதை நாம் நடைமுறைக்கு கொண்டுவந்தோம். இன்று அது தொடர்வது சந்தோசம்.
யாழ் மாவட்டத்திலுள்ள 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வேட்பு மனுக்களை இன்றையதினம் தாக்கல் செய்திருக்கின்றோம். எங்களுடைய கட்சிக் கொள்கைகளை முன்வைத்து கட்சியின் சின்னம் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
நீண்ட காலமாக நாம் மக்களுடன் வாழ்ந்துவருகின்றபடியால் மக்கள் எம்மீது புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். அந்த வகையில் நாங்கள் பிரதானமாக மூன்று விடயங்களை இந்த தேர்தல் காலத்தில் கட்சியின் கொள்கை நிலைப்பாடாக முன்வைத்திருக்கின்றோம்.
ஒன்று அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வாகவும் இரண்டாவது அபிவிருத்திக்கான தீர்வாகவும் மூன்றாவது அரசியல் உரிமை பிரச்சினைக்குரிய தீர்வாகவும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.
அரசியல் உரிமை எனும் போது விசேட அதிகாரங்கள் உள்ளடங்கலாக மீளவும் பெறமுடியாத அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல தமிழ்த்தலைமைகளின் ஏமாற்றங்களுக்குள் உட்பட்டிருக்கின்றார்கள்.
ஆகையால் நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்களுடைய ஆணையை நாங்கள் பெற்று மக்களுடைய பங்களிப்போடு அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் நாங்கள் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்பதை சந்தோசத்தோடும் நம்பிக்கையோடும் உறுதியோடும் நான் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Related posts:
|
|