மக்களின் அபிலாசைகளையே கட்சியின் தீர்மானங்களாக எடுத்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக எமது கட்சியை மேலும் பலப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டு வருகின்றோம். கடந்தகாலங்களை விடவும் மக்களுடைய நேரடி அபிப்பிராயங்களையும் மனவிருப்பங்களையும் அவர்களிடமிருந்து பெற்று அவர்களின் அபிலாசைகளையே கட்சியின் தீர்மானங்களாக எடுத்துவருவதுடன் அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வடமராட்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியின் நான்கு உள்ளூராட்சி பிரிவுகளை உள்ளடக்கிய வட்டார ரீதியிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கிடைக்கின்ற வாய்ப்புகளை பெற்றுக்கொண்டு நாம் அடுத்த தேடுதலை நோக்கி முன்னேறவேண்டுமே தவிர கனிந்துவரும் சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்து பெற்றுக்கொள்ள முடியாத ஒன்றை தரவேண்டும் என கூச்சலிட்டுக் கொண்டிருப்பதனால் எமது மக்களின் தேவைப்பாடுகளுக்கான தீர்வுகள் கிடைத்துவிடப்போவதில்லை.
இன்றைய அரசியல் நீரோட்டத்தை உணர்ந்து அதனூடாக நாம் எதனை பெற்றுக்கொள்ள முடியுமோ அத்தகைய பொறிமுறைமூலம் எமது தேவைகளுக்கான பாதை நோக்கி அரசியல் நகர்வுகளை முன்னகர்த்திச் செல்லவேண்டும்
கடந்தகாலங்களில் எமது இனத்தின் விடியலுக்காக முன்னெடுக்கப்பட்ட உரிமைப் போராட்டங்கள் அனைத்தும் நீதியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. பின்நாளில் அவை திசைமாறி சென்றமையால் அது எமது இனத்திற்கு அழிவுகளையும் தீரா வடுக்களையுமே பெற்றுத்தந்து சென்றுள்ளன. ஆனால் நாம் முன்னெடுத்துச்சென்ற இணக்க அரசியலூடான பாதைதான் எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் என்ற உண்மையை இன்று இதர தரப்பினருக்கும் எடுத்துச் சொல்லியுள்ளது.
கடந்தகாலங்களில் எமது கரங்களுக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி மத்தியிடமிருந்து எமது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுத்து வந்திருக்கின்றோம். இனிவருங்காலத்தில் உங்களது ஆதரவுகள் மேலும் அதிகரிக்குமானால் இன்னும் பன்மடங்கு அபிவிருத்திகளையும் மக்களுக்கான நிரந்தர அரசியல் சார் தீர்வுகளையும் பெற்றுத்தர நாம் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலார் கா வேலும்மயிலும் குகேந்திரன்( வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவி திருமதி இ.கைலாஜினி, பருத்தித்துறை நகரசபை முன்னள் எதிர்க்கட்சி உறுப்பினர் மார்க்கு மனுவேல், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன், பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசுந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கட்சியின் வடமராட்சி பிரதேசத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|