பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் – டக்ளஸ் எம்.பி கோரிக்கை!
Wednesday, May 23rd, 2018இந்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு நீங்கள் முயல்வதாகக் கூறுகிறீர்கள். அதற்காக அவசரப்பட்டு, மேலும், மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இன்று இந்த நாட்டில் அபிவிருத்தி என்ற பெயரில் பல அமைச்சுக்கள் இருக்கின்றன. இவற்றில் எத்தனை அமைச்சுக்கள் செயற்பாட்டில் இருக்கின்றன என்ற கேள்வி எமது மக்களிடையே இல்லாமல் இல்லை. வடக்கின் அபிவிருத்திக்கு என்றும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கு தேவையில்லை என நினைத்துவிட்டீர்கள்.
மேல் மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்கும், வடமேல் மாகாணத்திற்கும் அபிவிருத்தி அமைச்சுக்களை ஏற்படுத்திய நீங்கள், ஏனைய மாகாணங்களில் அபிவிருத்தி தேவையில்லை என்று நினைத்தோ, அல்லது ஏனைய மாகாணங்கள் அனைத்தும் முழுமையான அபிவிருத்திகளை கண்டு விட்டன என நினைத்தோ அவற்றுக்கென அபிவிருத்தி அமைச்சுக்கள் உருவாக்காமல் இருந்துவிட்டு, இப்போது வடக்கு மகாணத்திற்கும், கண்டி மாவட்டத்திற்கும் உருவாக்கியுள்ளீர்கள். இதனாலாவது ஏதேனும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.
மத்திய அரசில் ஸ்திரத் தன்மை இன்னமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எமது மாகாணங்களைப் பொறுத்தவரையில், கிழக்கு மாகாணம் தேர்தலுக்காக தவம் கிடக்கின்றது. வடக்கு மாகாணம், எமது மக்களுக்கு பயனாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்ற சாதனையை நிலைநாட்டி, உயிரிழந்த எமது மக்களை வைத்து, உயிருடன் உள்ள எமது மக்கள் மத்தியில் சுயலாப அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
Related posts:
|
|