பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈடு: டக்ளஸ் எம்பியின் கோரிக்கைக்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணக்கம்!

Friday, September 6th, 2019

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென காலாகாலமாக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் 27/2 கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

1950 – 1960 ஆண்டுகாலப் பகுதியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களில் இழப்பீடுகள் வழங்கப்படாத 501 உரிமையாளர்களது உரித்தாளர்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு யுத்தம் காரணமாகவும் நீண்டகால இடப்பெயர்வு காரணமாகவும் அதற்குரிய உறுதிபடுத்தல்கள் போதிய அளவு இல்லாத நிலையில் இருக்கின்றமையால் இவர்கள் அந்த இழப்பீடுகளைப் பெறமுடியாதுள்ளனர்.

சுமார் பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த காணி சுவீகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்துள்ள நிலையில் அவர்களது வம்சாவழியினர் தமது பூர்வீக காணிகளுக்கான  நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீண்டகாலமாக இழப்பீடுகள் கிடைக்காதிருக்க உரிமங்களை அடையாளங் காண்பதற்கு தற்போதுள்ள சந்ததியிரால் முடியாதுள்ளமையே காரணம். அத்துடன் முடியுமான அளவு, சந்ததியினர் தமது காணிகளின் ஆவணங்களை இயன்றவரை காட்டும் பட்சத்தில் அதிகாரிகள் அதை ஆராய்ந்து சிபாரிசு செய்யுமிடத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் ரணதுங்கவிடம் கோரியிருந்தார்.

அத்துடன் பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 646 ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்பட்டதாகவும், இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. இதையும் விரைவு படுத்தி நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார். குறித்த கோரிக்கையையும் அமைச்சர் ரணதுங்க ஏற்றுக்கொண்டு தீர்வு காண்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாகவும் நுழைவாயில் பாதை மாற்றம் தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் உயரதிகாரிகளை உள்ளடங்கிய குழு ஒன்று அடுத்தவாரம் வயாவிளான் பிரதேச பொது அமைப்புகளை அழைத்து அமைச்சில் காட்சிப்படுத்தல் ஒன்றை மேற்கொள்வுதற்கும் டக்ளஸ் எம்.பியின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரணதுங்க இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: