பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
Wednesday, May 8th, 2019அண்மையில் நாட்டில் நடத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டித்திருந்திருந்தோம். இந்த நாட்டில் பயங்கரவாதமானது எந்த வடிவில் – யாரின் மூலமாக முன்னெடுக்கப்பட்டாலும் அதை நாங்கள் அனுமதிக்கப் போகின்றவர்கள் அல்லர்.
எனினும், பயங்கரவாதத்தை அடக்குவது அல்லது ஒழிப்பது தொடர்பில் இந்த நாட்டில் ஏற்கனவே பல்வேறு அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன. தென்பகுதியில் ஆகட்டும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆகட்டும் நிறையவே அனுபவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போதைய நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவோர் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கின்றபோது, மிகுந்த அவதானங்கள் தேவை என்பதையே முதலில் நான் உணர்த்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற எத்தகைய நடவடிக்கையும், இனங்களுக்கிடையில் வெறுப்பபுணர்வுகளையோ, குரோத மனப்பான்மையினையோ, சந்தேகங்களையோ, அச்சத்தையோ ஏற்படுத்தக் கூடாது என்பதுடன், குறிப்பிட்ட எந்தவொரு இனம் சார்ந்த மக்களினதும் உணர்வுகள் புண்படுத்தப்படக்கூடாது என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அண்மையில் நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்டிருந்த அசம்பாவித சம்பவமானது, மதுபோதையில் ஏற்பட்டதொரு சிறு சர்ச்சையானது, மோதல் நிலைக்கு உருவெடுத்தது எனக் கூறப்பட்டாலும், இத்தகைய சிறு சர்ச்சைகள் பாரிய மோதலாக சமூகத்தில் உருவெடுப்பது என்பது சாதாரண விடயமாகும் என்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் அத்தகைய நிலைமைகள் இரு இனங்களிடையே ஏற்படுவதென்பது பாரதூரமான விடயமாகவே கருதப்படல் வேண்டும்.
தற்கொலைத் தாக்குதல்கள் ஏற்பட்ட கையுடன், இனங்கள் மத்தியில் இத்தகைய குரோத நிலைப்பாடுகள் தோற்றம் பெறாதிருக்கக்கூடிய வகையிலான முன்னேற்பாடுகள் அவசியமாக்கப்பட்டது. அத்துடன், சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இத்தகைய முன்னேற்பாடுகள் இன்னும் மிக, மிக அவசியமாகத் தேவைப்பட்டது. இந்தத் தேவைப்பாடானது முழுமையாகாத பட்சத்திலேயே இனக் குரோத நிலைப்பாடுகள் கலையாதிருப்பதற்கு – அல்லது வளர்வதற்கு காரணமாகின்றன.
Related posts:
|
|