நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, December 27th, 2016தென்னிலங்கை மக்களது மனங்களை வென்றெடுப்பதனூடாகத்தான் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை காணமுடியும். அத்தகைய பாதையைத்தான் நாம் நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால் இதர தமிழ் அரசியல் தரப்பினர் தமது அரசியல் இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக அத்தகைய யதார்த்தபூர்வமான வழிமுறையை தட்டிக்களித்து வருவதனால் முழுமையாக அந்த மக்களது மனங்களை வென்றெடுக்க முடியாதுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கட்சியின் சுன்னாகம் அலுவலகத்தில் வலிவடக்கு, மற்றும் வலி தெற்கு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பிரதேச நிர்வாக செயலாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களுடனான விஷேட கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தேசியம் பேசுபவர்கள் அழிவுகளையும் நிம்மதியிழந்த வாழ்வையும் தவிர எமது இனத்திற்கு வேறெதனை பெற்றுத்துள்ளார்கள். ஆனால் நாம் முன்னெடுத்துவரும் தேசியம் யதார்த்த பூர்வமானதும் மக்கள்மீது அக்கறையுள்ளதுமாக இருந்துவருகின்றமையால் தான் இன்று அது வெற்றிகண்டுள்ளது.
தமிழ் மக்கள் நியாயபூர்வமான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள உறுதியாகவே உள்ளனர். தமிழ் மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்தவேண்டிய தேவைப்பாடு இன்று இல்லை. மாறாக தென்னிலங்கை மக்களுக்கே எமது தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதை செய்யாத இதர தமிழ் அரசியல் தரப்பினர் தேசியம் என்ற போர்வையில் தமது சுயநல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றமைதான் எமது மக்களின் இன்றையகால நிலைமைகளுக்கு காரணமாகும்.
தென்னிலகை மக்களது மனங்களை வென்றெடுத்துள்ள எமது அரசியல் பொறிமுறையை கொண்டு தமிழ் மக்களது அரசியல் உரிமை சார் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை காணமுடியும் என்று நாம் உறுதிபட தெரிவிக்கின்றோம்.
நாம் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் பாதையை நோக்கி தமிழ் மக்கள் அணிதிரண்டுவருவார்களானால் இன்றுவரை தீராப் பிரச்சினையாக இருந்துவரும் எமது இனத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வை கண்டுகோள்ளமுடியும் என்று உறுதியுடன் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன். கட்சியின் வலி தென்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலண்டயன் கட்சியின் வலி.வடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) கட்சியின் வலி.வடக்கு உதவி நிர்வாக செயலாளர் பவான், கட்சியின் வலிதெற்கு உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் உள்ளிட்டோருடன் வலி.வடக்கு, வலி.தெற்கு பிரதேச வட்டார நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|