நினைவுக் கல்லை மூடி மறைக்கலாம், எமது உழைப்புடன் நிமிர்ந்து நிற்கும் மண்டபத்தை மூடிமறைக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா
Sunday, June 5th, 2016யாழ்ப்பாணத்தின் கூட்டுறவுச் சங்கச் வரலாற்றின் செயற்பாட்டிற்கு முதல் தலைவராக பொறுப்பேற்று சரித்திரம் படைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.வீரசிங்கம் அவர்களின் நாமம் அழியாப் புகழுடன் அரை நூற்றாண்டுகள் கடந்தும் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்திற்கு அவரது பெயரைச் சூட்டி அவருக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றார்கள் யாழ்ப்பாண மக்கள்.
1987ஆம் ஆண்டு வீரசிங்கம் மண்டபம் யுத்தத்தால் சிதைந்து போனது. 2002ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது 80 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்து வீரசிங்கம் மண்டபத்தை மீண்டும் யாழ்ப்பாண மக்களின் பாவனைக்கு கையளித்திருந்ததோடு,இடிபாடுகளைத் தொடர்ந்து வீரசிங்கம் மண்டபத்திலிருந்து வெளியேறியிருந்த கூட்டுறவுத்துறை நிர்வாகத்தையும் மீண்டும் வீரசிங்கம் மண்டபத்திலேயே தனது பணிகளை முன்னெடுக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது –
அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் அப்போதிருந்த தேவைகளுக்கமைவாக நாம் புனரமைப்பு செய்தபோதும்,
2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் வடக்கு அபிவிருத்திக் கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்துவதற்கு வேண்டுகோள் விடுத்ததுடன்.
அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வீரசிங்கம் மண்டபத்தை மீண்டும் 110 இலட்சம் ரூபா செலவில் புதுப்பொலிவுடனும், நவீன வசதிகளுடனும் புனரமைப்புச் செய்திருந்தேன்.
2014ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பானது, அவசியமான திருத்தங்களுடனும், மேலதிக வசதிகளை ஏற்படுத்துவதாகவும், திட்டமிடப்பட்டு, வீரசிங்கம் மண்டபத்திற்கு புது மெருகூட்டியதில் இரவு பகலாக செயற்பட்டிருக்கின்றேன்.
எனது முயற்சிக்கு அப்போதைய ஆளுனர் சந்திரசிறி அவர்களும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்புக்களைச் செய்திருந்ததையும் மறுக்க முடியாது. அந்தப் புனரமைப்புப் பணிகள் முடிந்து திறப்புவிழா செய்து வைத்தும், நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைத்தும் நாம் எமது சமூகக் கடமையை செவ்வனவே செய்திருந்தோம்.
ஆனால் தற்போது, நாம் புனரமைப்புச் செய்து திறந்து வைத்த நினைவுக்கல்லை இருட்டடிப்புச் செய்து எமது அர்ப்பணிப்பை வரலாற்றிலிருந்து மறைப்பதற்கு வட மாகாண சபையினரும், சில அதிகாரிகளும் முயற்சிக்கின்றனர்.
குறுக்கு வழியிலும், அரசியல் காழ்ப்புணர்வோடும் யார் முயற்சி செய்தாலும், யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மீளக்கட்டி எழுப்பிய எமது அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட வரலாற்றை யாரும் மறைத்துவிட முடியாது.
நினைவுக் கல்லை மூடி மறைக்கலாம், எமது உழைப்புடன் நிமிர்ந்து நிற்கும் வீரசிங்கம் மண்டபத்தை மூடிமறைக்க முடியாது.
Related posts:
|
|