நடேஸ்வராக் கல்லூரி : எமது அரசியல் அணுகுமுறைகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா
Tuesday, June 7th, 2016காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளமையானது கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே கொள்ள முடியும் என தனது முகநூலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி நாட்டில் ஏற்பட்ட யுத்தசூழல் காரணமாக
1990ஆம் ஆண்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொண்டு இடம்பெயர்ந்து, சுன்னாகம் கந்தரோடையில் பல்வேறு வசதிக் குறைபாடுகளுடன் தற்காலிகமாக இயங்கி வந்தது.
அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் ‘மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம்’ என்ற எமது நிலைப்பாட்டிற்கு அமைய,
ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருந்த முன்னாள் அரசுடன் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல்களுடனான கோரிக்கைகள் மூலமாக,
வடக்கில் படைத்தரப்பினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக்காணிகள்; 17 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்த அதேவேளை,
ஏனைய காணிகளையும் மக்களுக்கு கிடைக்கப் பெறச்செய்வதே எமது நிலைப்பாடாகவும் இருந்தது.
இதனிடையே படைத்தரப்பினரிடமுள்ள பொதுமக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டிற்கு தற்போதைய ஜனாதிபதியும், அப்போதைய அமைச்சரவை அந்தஸ்துள்ள சக அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
விடுவிக்கப்படாத படைத்தரப்பினர் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கான அடித்தளத்தை கடந்த காலங்களில் நாமே முன்னெடுத்திருந்தோம் என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
அத்துடன் எதிர்காலங்களில் எமது மக்களின்; உரிமைகளுக்காக தொடர்ச்சியாகவும் குரல் கொடுப்போம்.
இந்நிலையில், 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நாம் ஆட்சியில் பங்கெடுக்காத போதிலும், படைத்தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளையும் விடுவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில்
எதிர்க்கட்சியாக இருந்து கொண்ட போதிலும், எமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மட்டுமன்றி நாடாளுமன்றிலும்; தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இதனடிப்படையிலேயே 26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நகுலேஸ்வராக் கல்லூரியும்,
20 வருடங்களின் பின்னர் வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையும் சொந்த இடத்தில் இயங்கவுள்ளமை எமக்கு மட்டுமன்றி கல்வித்துறை சார்ந்தோருக்கும், பெற்றோர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது எமது அரசியல் அணுகுமுறைகளால் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|