தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: தேசத்தை கட்டியெழுப்ப அபிவிருத்தி – டக்ளஸ் தேவானந்தா
Saturday, December 24th, 2016அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் எமது இரு கண்கள். அந்த வகையில் நாம் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்காகவும் எமது மக்கள் வாழும் எமது தேசத்தின் அபிவிருத்திக்காகவும் எமது அரசியல் யதார்த்த வழிமுறை நின்று உறுதியுடன் உழைத்து வருகிறோம் என ஈழமக்கள் ஜயநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கட்சியின் வேலணைப்பிரதேச அலுவலகத்தில் வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பிரதேச நிர்வாக செயலாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களுடனான விஷேட கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, தேசத்தை தூக்கி நிறுத்த அபிவிருத்தி, நாம் ஒரு தேசிய இனம். அதற்கான அடையாளங்கள் யாவும் எமது தமிழ் தேசிய இனத்திற்கு என்றுமே உண்டு. அத்துடன் எமக்கென்றொரு மொழி உண்டு. நாம் வாழ ஓர் வரலாற்று வாழ்விடம் உண்டு. எமக்கென ஓர் பொருளாதார வளமுண்டு. எமது மக்களுக்கென தனித்துவமான ஓர் கலை கலாச்சார பண்பாடு உண்டு.
இவைகள் அத்தனைக்கும் மேலாக இவைகள் குறித்த உணர்வுகள் எமது மக்களுக்கு உண்டு. அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் எமது இரு கண்கள். அந்த வகையில் நாம் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்காகவும் எமது மக்கள் வாழும் எமது தேசத்தின் அபிவிருத்திக்காகவும் எமது அரசியல் யதார்த்த வழிமுறை நின்று உறுதியுடன் உழைத்து வருகிறோம்.
இவைகளை அடைவதற்கு எமக்கு தேவை அரசியல் பலம் ஒன்று மட்டுமே. கடந்த காலங்களில் நாம் போதிய அரசியல் பலமின்றியே உங்களது அபிலாசைகளை முடிந்தளவு தீர்வு கண்டு வந்திருக்கிறோம். அடுத்தவர்களுக்கு நீங்கள் வழங்கி வந்த அரசியல் பலத்தை எம்மிடம் தந்திருந்தால் நாம் உங்கள் அரசியல் தலை விதியையே மாற்றி எழுதியிருப்போம்.
ஒரு இனத்தின் மொழி அழிந்து போனால் அந்த இனமே அழிந்து போனது என்பதே அதன் அர்த்தம். வடக்கு மாகாண சபை தேர்தலின் போது தமிழ் தேசியம் என்று பேசி உங்கள் வாக்குகளை அபகரித்தவர்கள் அதில் வெற்றி கண்டார்கள். மலர்ந்தது தமிழரசு என்று ஊடகங்கள் சில எக்காளமிட்டு ஒத்தூதி ஆதரவளித்தன. ஆனாலும் அங்கு என்னதான் நடக்கிறது.
தமிழர்களுக்கு கிடைத்த வடக்கு மாகாண சபையில் அறிக்கைகள் ஆவணங்கள் கூட தமிழ் மொழியில் தயாரிக்கப்படுவதில்லை என்ற குரல்கள் எழுகின்றன. ஆங்கிலத்தில் மட்டும் அறிக்கை தயரிக்கப்படுவதாக மாகாண சபை உறுப்பினர்களே இன்று மாகாண சபையில் கேள்விகள் கேட்கிறார்கள்.
தமிழ் தேசியம் பேசி மாகாண சபையை தம் வசமாக்கியவர்கள் தமிழ் தேசியத்தின் பிரதான அடையாள மொழியான தமிழ் மொழியையே புறக்கணித்து வருகிறார்கள்.
ஆகவே நாங்கள் எமது தமிழ் தேசியத்தின் பிரதான அடையாளமான தமிழ் மொழி அமுலாக்கத்திற்காக குரல் குரல் கொடுக்க வேண்டியது அரசுக்கு எதிராக மட்டுமன்றி.. போலித்தமிழ் தேசியம் பேசி வடமாகாண சபையை அபகரித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராகவுமே என தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் தற்போது அமைக்கப்பட்டுள்ள வட்டார ரீதியான கட்டமைப்புகள் தொடர்பாகவும் வருங்காலங்களில் கட்சியின் முன்னகர்வுகள் தொடர்பாகவம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுப்பினர்களுக்கு கருத்துரைக்கப்பட்டது.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் கருணாகரகுருமூர்த்தி, கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயகாந்தன், கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் வசந்தகுமார் (முரளி) ஆகியோருடன் தீவக தொகுதிக்கான உள்ளூராட்சி வட்டார நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|