தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, May 19th, 2019


இளைஞர்கள் சமூக அக்கறையுடன் ஒன்றுபட்டு உழைக்க முன்வரும்போதுதான் அவர்களது பிரதேசம் மட்டுமல்லாது எமது மக்களது அபிலாஷைகளையும் இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற தென்மராட்சி பிரீமியர் லீக் கிறிக்கெற் சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த போட்டியை நடத்திய நிர்வாகத்தினர் இப்பிரதேசத்திற்கென ஒரு பொதுவான சர்வ வசதிகளுடன் கூடிய மைதானம் இல்லை என சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் கடந்த காலத்தில் நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சாவகச்சேரி நகராட்சி மன்ற மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். ஆனாலும் துரதிஸ்டவசமாக ஆட்சி மாற்றம் அந்தத் திட்டத்தையும் தடுத்தவிட்டது. ஆனாலும் குறித்த நகராட்சி மைதானத்தை நிச்சயமாக வெகு விரைவில் ஒரு சர்வதேச தரத்திலான மைதானமாக புனரமைத்து உங்களது பயன்பாட்டுக்கு தர முடியும் என்று நம்புகின்றேன். இதை நான் அரசியல் நோக்கத்துடன் கூறவில்லை. எனக்கும் எமது இளைஞர்களுடைய அபிலாசைகளை நிறைவு செய்துகொடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பும் சமூக அக்கறையும் உள்ளது.

எமது பிரதேசத்தின் விளையாட்டுத்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த காலங்களில் குறிப்பாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திற்கும் இலங்கையின் பெரும்பாலன ஏனைய பகுதிகளுக்கும் இடையே எந்தவிதமான போக்குவரத்து வசதிகளும் இல்லாதிருந்த காலத்தில் எமது இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த, அவர்களுக்கு அத்துறையில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கப்பல்களிலும் விமான மூலமும் நான் தென்னிலங்கைக்கு அவர்களை அனுப்பிவைத்து பயிற்சிகளையும் வழங்கவும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பக்களையும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்து கொடுத்திருக்கின்றோம்.

மேலும் இனிவரும் காலங்களிலும் எமது இளைஞர் யுவதிகளின் விளையாட்டு துறையை சிறந்தமுறையில் வளர்த்தெடுப்பதற்காகவும் அதற்கான கழங்களையும் வாய்ப்புக்களையும் மட்டுமல்லாது அதற்கான தேவைப்பாடுகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக எம்மால் முடியுமான பங்களிப்பை நாம் பெற்றுக்கொடுக்க தயாராகவே இருக்கின்றோம் என தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள் இன்றையநாள் (18) தமிழ் மக்களுக்கு ஒரு வருத்தத்தை கொடுத்து நிற்கின்ற வலிகள் சுமந்த நாளாக அமைந்திருக்கின்றது. அந்த அழிவு யுத்தத்தில் பலியாகிப்போன  எமது மக்களுக்காக அவர்களை ஞாபகப்படுத்துகின்ற தினமாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இருந்தாலும் இன்றைய தினத்தை ஒரு முன்னேற்றகரமாக அதாவது மக்களது உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற வகையில் இந்த நிகழ்வை நடத்தியுள்ளீர்கள். அந்தவகையில் இளைஞர்களது ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகத்தான் இந்த தென்மராட்சி பிரீமியர் லீக் தொடரின் வெற்றி அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: