திருமலை தமிழ் மக்கள் யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Sunday, March 28th, 2021திருமலை மக்கள் யதார்த்த அரசியலை புரிந்து கொள்வதன் மூலமே தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலைக்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, இன்று நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
திருமலை மாவட்டத்தின் அரசியல் சூழலை கையாளக்கூடிய காத்திரமான தமிழ் தலைமையின் அவசியம் தொடர்பாக மாவட்டத்தின் புத்திஜீவிகளினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கட்சியின் மாவட்ட செயற்பாடுகளை காத்திரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சரின் திருமலை விஜயம் அமைந்திருந்தது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், “திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் வரலாற்று விழுமியங்களையும் பாதுகாப்பது தொடர்பாகவும் தற்போது பலரும் கோரிக்கைகளை முன்வைக்கினறனர்.
இவ்வாறான கோரிக்கைகள், குளத்தில் போட்ட பொருளை ஆற்றில் தேடுவது போன்றே அமைந்துள்ளது.
தேர்தல் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளித்து தீர்மானங்களை தமிழ் மக்கள் மேற்கொண்டிருப்பார்களாயின் தற்போது காத்திரமான நன்மைகளைப் பெற்றிருக்க முடியும்.
மக்களுக்கு யாதார்த்த அரசியல் தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் வகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று கட்சி செயற்பாட்டாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தாவை சந்தித்த பல்வேறு சமூக அமைப்புக்கள் மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வை காண்பதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|