அனைவருக்கும் நன்மை தரக்கூடிய தீர்வு பெற்றுத்தரப்படும் – ஒந்தாச்சிமடத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Saturday, May 4th, 2024ஒந்தாச்சிமடம் மகிழூரில் மீன் வளர்ப்பு பண்ணையாளர்களையும், மீன்பிடியாளர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது பண்ணையாளர்கள் பண்ணைகளுக்கு அனுமதியைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதன்போது மீன்பிடியாளர்கள் கருத்து கூறும்போது – மீன் வளர்ப்பு பண்ணையாளர்களால் களப்பை தடுத்து வேலிகள் அமைக்கப்படுவதால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மீன், இறால் பிடிபாடகள் பல காரணங்களால் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் மீன்வளர்ப்பு பண்ணைகளை ஒடுங்கிய களப்புப் பகுதிக்குள் இல்லாமல் களப்பின் மத்திய பகுதிக்கு நகர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதேவேளை களப்பில் தடைசெய்யப்பட்ட இழுவை வலை, தங்கூசி வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி தொழில் செய்வதும் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் மீன்பிடி திணைக்களம் , நெக்டா நிறுவனம், நாரா நிறுவனம் இணைந்து பண்ணையாளர்கள், மீன்பிடியாளர்களையும் இணைத்து மேற்கூறிய பிரச்சனைகளைத் தீர்க்க திட்டம் ஒன்றை ஒரு மாதத்திற்குள் தருமாறு கூறிய அமைச்சர் அதைக்கொண்டு எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய தீர்வை தருவதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே மட்டக்களப்பு கொக்கடிச்சோலையில் இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
மூன்று விதமான முதலீட்டாளர்களை உள்வாங்கி இறால் பண்ணைகளை அமைக்கும் இத்திட்டத்தில் 42 பேருக்கு ஒன்றேகால் ஏக்கர் வழங்கப்பட்டு சிறு பண்ணையாளர்களாகவும் , 12 பேர் 10 ஏக்கர் வழங்கப்பட்டு நடுத்தரப் பண்ணையாளர்களாகவும், 5 பேருக்கு 25 ஏக்கர் வழங்கி பெரிய பண்ணையாளர்களாகவும். அவரவர் முதலீட்டு தகமைக்கேற்ப நெக்டா நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் காணிகளை பயனாளர்களுக்கு வழங்கும் பணிகள் சில காரணங்களால் தமதப்பட்டதால் அதைச் சரிசெய்து உரிய பயனாளிகளுக்கு காணிகளை விரைவாக வழங்கும் நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|