திருமலையில் ஈ.பி.டி.பி. குடியேற்றியவர்களுக்கு காணி உரிமம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Friday, August 5th, 2022திருகோணமலை மாவட்டத்தில் 1993 தொடக்கம் 1997 வரையான காலப்பகுதியில் ஈ.பி.டி.பி. கட்சியினால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடியேற்றப்பட்ட மக்களுக்கான காணி உரிமங்களை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், காணி உரிமங்களை வழங்குவதற்கான முன்னோடி நடவடிக்கையாக வர்த்தமானியை வெளியிடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் உரியவர்களுக்கான உரிமப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், “திருகோணமலை மாவட்டத்தில் காணிகளற்று வாழ்ந்த மக்களையும், நாடு கடந்து அகதிகளாகச் சென்று மீண்டும் நாடு திரும்பிய மக்களையும், தொடர்ந்தும் அகதி முகாம்களிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அந்தரிக்க விடாமல் அவர்களை வாழ வைக்கவேண்டும் என்பதே ஈ.பி.டி.பியின் நோக்கமாக இருந்தது.
அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பினை உறுதிப்படுத்தி அங்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் அங்கு குடியேற்றங்களை அமைக்க வேண்டுமெனவும் கருதியே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி செயற்பட்டது.
நாம் முன்னெடுத்த குடியேற்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், தமிழ் மக்களைத் தொடர்ந்தும் நட்டாற்றில் அவல வாழ்க்கை வாழவிடவும் விரும்பிய அப்போதைய திருமலை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேசமடைந்து, ‘திருகோணமலை மாவட்டத்தில் மக்களைக் குடியேற்றம் செய்வதற்கு ஈபிடிபிக்கு அதிகாரங்களை யார் வழங்கியது’ என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்ததுடன், திருகோணமலையில் ஈ.பி.டி.பி.யினர் மேற்கொள்ளும் குடியேற்றங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் உரையாற்றினார்.
அத்தோடு நின்றுவிடாமல் அரசியல் ரீதியாகவும், காலத்திற்கு காலம் அமைக்கப்பட்ட அரசாங்கங்களின் மூலமாகவும், ஈ.பி.டி.பி. குறித்த முயற்சியை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அனைத்து விதமான தடைகளையும், எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனை முன்னிறுத்தி எமது செயற்பாடுகளை திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொண்டதன் பயனாக அங்கு தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டார்கள்.
இப்போது அவர்களுக்கே விரைவில் காணி உரிமப் பத்திரங்கள் கிடைக்கவுள்ளன.” என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|