அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் – செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, May 10th, 2018

எமது மக்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்திருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள – அதாவது, தற்போது முழுமையாக செயற்படுத்தப்படாவிட்டாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள முழுமையான அதிகாரப் பகிர்வைவிட கூடிய அதிகாரப் பகிர்வைக் கொண்டதான ஓர் அரசியல் யாப்பு புதிதாக நிறைவேற்றப்படுமானால், அதனை நாம் ஏற்றுக் கொள்வோம். அதற்குத் தடையாக நாம் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்துவதை எமது மக்களுக்குரிய அதிகாரப் பகிர்விற்கான ஓர் ஆரம்பமாக வலியுறுத்துகின்றோமே தவிர, இந்த 13வது திருத்தச் சட்டத்தைவிட கூடிய அதிகாரப் பகிர்வினைக் கொண்ட புதிய அரசியல் யாப்பிற்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். எனினும், அதற்காக சாத்தியமற்ற வழிகளில் முயற்சித்துக் கொண்டு காலத்தைக் கடத்துவதால் எவ்விதமானப் பயனும் எவருக்கும் கிட்டப் போவதில்லை என்பதையே நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

புதியதொரு அரசியல் யாப்பின் ஊடான அதிகாரப் பகிர்வு சாத்தியமா? சாத்திமில்லையா? என்பது குறித்து இப்போது எவராலும் நிச்சயித்துக் கூற முடியாது என்றே நான் கருதுகின்றேன். நேர்மையான முறையில் இது சாத்தியமாகியிருக்க வேண்டுமானால், இந்த அரசின் முதல் 100 நாட்கள் ஆட்சிக் காலத்திலேயே இதனை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது எல்லாமே ‘ஆறிய கஞ்சி, பழங் கஞ்சியாகிப்” போய்விட்டது.

எனவே, அதிகாரப் பகிர்வினை நோக்கியதான புதிய ஏற்பாடுகள் வரும் வரையில், தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற, எமது அரசியல் யாப்பில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமையை முழுமையாக செயற்படுத்தி, எமது மக்களின் அதிகாரப் பகிர்விற்கு இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன்- என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
தடம் புரண்டுசெல்லும் எமது இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - டக்ளஸ் தேவானந்...
அபிவிருத்தியை சலுகை என்றுஎதிர்த்தவர்கள் அடிக்கல் நாட்டுகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெ...

அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் - சம்பூரில் டக்ளஸ் தேவா...
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எத...
வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவ...