தவறுகள் திருத்தப்பட்டு புதிய அத்தியாயம் எழுதப்படவேண்டும் – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா !
Sunday, February 26th, 2017மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் அரசியல் தலைமைகளால் சுயநலங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தவறுகள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும். கடந்தகால அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு எதிர்காலத்தில் புதியதொரு அத்தியாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நேரில் ஆராய்ந்தறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா உப்புவெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போது திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து உரையாற்றுகையில் –
தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமது அரசியல் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை வெற்றிகொள்ள அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல போராட்டங்களை நடத்தினர். முன்னெடுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் வழித்தடம் மாறிச் சென்றது.
எமது உரிமைக்கான போராட்டம் திசைமாறிச் சென்றதால் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் உருவான 13 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அன்றுதொட்டு இற்றைவரை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
அற்ப சலுகைகளுக்காகவோ அன்றி ஆடம்பர வாழ்வு வாழவேண்டுமென்தபதற்காகவோ நாம் ஒருபோதும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது. தமிழ் மக்களது வாழ்வில் வளமானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாம் அரசியல் பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றோம்..
நடப்பதையும் நடக்கப்போவதையும் சீரான பாதையில் கொண்டுசெல்ல கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகளால் விடப்பட்ட வரலாற்றுத் தவறுகளை செழுமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அரசியல் மாற்றம் என்பது மத்திய அரசியல் கொண்டுவரப்படும் மாற்றமாக மட்டும் இருந்துவிடாமல் அது தமிழ் மக்களது வாழ்வியலிலும் அரசியலிலும் முழுமைடியதாக அமையப்பெறல் வேண்டும். அவ்வாறானதொரு களத்தை எமது கரங்களுக்கு மக்கள் தருவார்களானல் இம்மாவட்டத்தில் எமது மக்கள் கண்டுவரும் சோக வாழ்க்கைகளுக்கு நிரந்தரமான விடியலை பெற்றுத்தரமுடியும். அதற்கான ஆற்றலையும் அக்கறையையும் நாம் கொண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட நிர்வாக செயலாளர் புஸ்பராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.
Related posts:
|
|