தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
 Wednesday, December 5th, 2018
        
                    Wednesday, December 5th, 2018
            தமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாலேயே தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவோ, தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவோ, தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றவோ தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டத்தின் முதற்கட்டமாக டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 15 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள், தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர் நடத்தும் தரகு அரசியலால் மீண்டும் காலதாமதத்தை எதிர்நோக்கியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களை அடகு வைத்து தமது சுயலாப அரசியலுக்காக தரகு அரசியல் செய்த தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர், தமது சுயலாபங்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும், தமது தரகுக் கூலிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும் இன்று செயற்படுகின்றனர்.
தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினரின் தரகு சுய லாப அரசியலானது, நாம் ஆரவாரமின்றி சாதிக்க நினைத்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையும், வீடற்று மழையிலும், வெயிலிலும் துன்பப்பபடும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் எமது முயற்சி காலதாமதப்படுத்தச் செய்துள்ளது.
நாம் கடந்து வந்த அரசியல் பாதையானது கல்லும் முள்ளும் நிறைந்த கடும் பயணமாகும் என்பதால் தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். எமது முயற்சிகளுக்கு வாய்ப்பாக ஒரு விநாடி கிடைத்தாலும் அதை முடியுமானவரை மக்களின் அரசியல் தீர்வு, அபிவிருத்தி, அன்றாடப்பிரச்சனைகள் எனும் முதன்மைப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைக்காண்பதற்காக பயன்படுத்துவோம்.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள சவால்களையும் எதிர்கொண்டு எமது மக்களின் அரசியல் தீர்வு, அன்றாடப்பிரச்சனைகளுக்குத் தீர்வு, அபிவிருத்தி போன்றவற்றுக்கான தீர்வுகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான கடின உழைப்பும், ஆற்றலும், விருப்பமும் எம்மிடம் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        