தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தொடர்ந்து துரோகம் செய்கின்றது: வவுனியாவில் டக்ளஸ் எம் பி சுட்டிக்காட்டினார்.
Saturday, October 13th, 2018வவுனியாவில் 3 உறுப்பினர்களே பிரதேச சபைகளுக்கு தெரிவானார்கள். இருந்தபோதும் அந்த உறுப்பினர்களும் மாவட்ட நிர்வாக தோழர்களும் சேர்ந்து மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்துவருகின்றார்கள்
நமக்கு பிரதேச சபைகளை மக்கள் பொறுப்பளித்திருப்பார்களாக இருந்தால். இதைவிடவும் பல மடங்கு மக்களின் தேவைகளைத் தீர்க்க முடிந்திருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் மாவட்டத்தின் நிர்வாகக் குழுவினர் மற்றும் வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய செயலாளர் அவர்கள் –
ஈ.பி.டி.பி கட்சியானது தனது இலக்கு நோக்கிய கொள்கையிலோ. அணுகுமுறையிலோ எவ்விதமான மாற்றங்களையும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் ஆட்சியின் தன்மை தொடர்பான விவாதத்தில் ஒற்றையாட்சியை வலியுறுத்தியதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். அந்தக் கூட்டத்தில் நான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையே வலியுறுத்தினேன். ஒற்றையாட்சியை. ஒருமித்த நாடு என்று வார்த்தை ஜாலங்களால் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்.
புதிய அரசியலமைப்பில் என்ன உள்ளடக்கம் இருக்கின்றது என்ற உண்மையைச் சொல்லுங்கள் என்று வலியுறுத்தினேன். சிங்களத்தில் ஒன்றையும் தமிழில் வேறொன்றையும் கூறாதீர்கள் என்று கூறினேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை பலியிட்டவர்கள். தமிழ் மக்களின் அவலங்களுக்கு காரணமானவர்கள். தேர்தல்களின் போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தவர்கள்.
இப்போது தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக கூறிக்கொண்டு வார்த்தை ஜாலங்காளை முன்வைத்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் துரோகம் செய்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், ஊடகச் செயலர் தோழர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட அமைப்பாளர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|