தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரவில்லை – டக்ளஸ் தேவானந்தா!
Sunday, February 26th, 2017
திருகோணமலையில்1993,1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம் தமிழ் மக்களை குடியேற்றங்களை ஏற்படுத்தி குடியேற்றியபோது, எமது முயற்சிகளை தடுத்து நிறுத்த முயற்சித்த சில தமிழ்த் தலைமைகள் அப்போதைய அரசாங்கத்திடம் சென்று, மக்களை குடியேற்றம் செய்யும் அதிகாரத்தைக் கொடுத்தது யார்? எப்போது அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டது என்று கேள்விகளையும் எழுப்பினார்கள்.
அந்தத் தடைகளையும் முட்டுக்கட்டளைகளையும் எதிர்கொண்டே சவால்களுக்கு மத்தியில் தற்துணிவோடு நாம் திருகோணமலையில் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்தினோம். இருந்தபோதிலும் மாறிவந்த அரசியல் சூழ்நிலைகள் காரணமாக உங்களுக்கான காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த குடியேற்றங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களே இன்று இந்த மாவட்டத்தின் பெரும் சக்தியாக உருவாகி இருக்கின்றார்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பியின் கடினமான முயற்யினால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் காணிகளுக்கு உறுதிகளைப் பெற்றுக் கொடுப்பது, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, அந்தக் கிராமங்களின் உள்ளக வீதிகளை புனரமைப்பது, குடிநீர் வசதிகளை முறையாக ஏற்படுத்துவது, மற்றும் சுயதொழில்களையும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற திட்டங்களை அந்த மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும் போது, தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற தலைவர்கள் தாமே என்று கூறிக்கொள்பவர்கள் தாம் தற்போதைய அரசுடன் கொண்டிருக்கும் இணக்க அரசியலைப் பயன்படுத்தி இந்த மக்களின் நீண்டகால பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கலாம்.
ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்யாமல் தாம் நடத்தும் இணக்க அரசியலின் ஊடாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியையும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் பதவியையும், மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகளையும், சொகுசு வாகனங்களையுமே அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை புதிய அரசாங்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக இணக்க அரசியல் நடத்தும் கூட்டமைப்பினர், ஆட்சி அமையப் பெற்ற ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
மக்களை மறந்து கூட்டமைப்பினர் செயற்படுவதற்கு தமிழ் மக்களும் ஒரு வகையில் காரணமாவார்கள். வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தமிழ் மக்கள் தமக்காக உழைப்பவர்களையும், தாம் இலகுவாக அணுகக் கூடியவர்களையும் தெரிவு செய்ய வேண்டும். தவறுகள் திருத்தப்படுவதற்கு மக்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.
இது தேர்தல் காலமும் இல்லை. நான் வாக்குக் கேட்டும் வரவில்லை. கடந்த காலத்தில் இருந்த அரசியல் சூழலில் நாம் சில காரியங்களை திட்டமிட்டிருந்தபடி செய்து முடிக்கமுடியவில்லை. தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் அதற்கான கேள்விகளைக் கேட்கவும் உங்களின் நீண்ட காலக் கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்.
இங்கே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியவை, தீர்க்கப்படக் கூடியவை, தீர்த்திருக்கவேண்டியவை. எனவே எதிர்வரும் காலங்களில் ஈ.பி.டி.பியுடன் மக்கள் அணிதிரண்டு வருவார்களானால் அதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் எனது முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமையும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
Related posts:
|
|