ஜா எல மீன்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
Monday, September 28th, 2020
ஜா எலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையை வினைத்திறனுடன் இயங்கச் செய்து உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இன்று(28.09.2020) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற துறைசார்ந்தவர்களுடன் அமைச்சர் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப மெருகூட்டலுக்கான நிதியினை வழங்குமாறு சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜா எலையில் செயற்பட்டு வருகின்ற ‘எக்ரி ஸ்டார் பிஸ் மீல்ஸ்’ தனியார் நிறுவனமானது தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா) ஆலோசனையுடன் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் மீன்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் முதலாவது நிறுவனமான குறித்த நிறுவனத்தில், இயந்திரங்களின் வினைத்திறனற்ற செயல்பாடுகள் காரணமாக உற்பத்தியை முழுவீச்சுடன் மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த விடயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், தொழிற்சாலையின் செயற்றிறன் அதிகரிக்கப்படுமாயின், நாளொன்றுக்கு சராசரியாக 1500 கிலோகிராம் மீன்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி தொழிற்சாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் தொழிற்சாலை செயற்பாடுகளை அவதானித்ததையடுத்து துறைசார் நிபுணர்களினால் தொழிநுட்ப ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்நது, தொழிற்சாலையின் தொழில்நுட்ப மெருகூட்டலுக்கான நிதியினை வழங்கி வினைத்திறனான செய்பாடுகளை உடனடியாக ஆரம்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|